Home நாடு ஐசிஸ் மலேசியா (ISIS-Malaysia) வட்ட மேசை மாநாடு கோலாலம்பூரில் 3 நாட்களுக்கு நடந்தேறியது

ஐசிஸ் மலேசியா (ISIS-Malaysia) வட்ட மேசை மாநாடு கோலாலம்பூரில் 3 நாட்களுக்கு நடந்தேறியது

51
0
SHARE
Ad
ஐசிஸ் 38-வது ஆசிய பசிபிக் வட்ட மேசை மாநாட்டுப் பேராளர்களை வரவேற்று உரையாற்றும் வெளியுறவு அமைச்சர் முகமட் ஹாசான்

கோலாலம்பூர்: இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கி மூன்று நாட்களாக ஐசிஸ் மலேசியா ஏற்பாட்டில் நடைபெற்று வந்த 38-வது ஆசியா பசிபிக் வட்டமேசை மாநாடு (ISIS-𝗠𝗔𝗟𝗔𝗬𝗦𝗜𝗔 𝟯𝟴𝗧𝗛 𝗔𝗦𝗜𝗔-𝗣𝗔𝗖𝗜𝗙𝗜𝗖 𝗥𝗢𝗨𝗡𝗗𝗧𝗔𝗕𝗟𝗘) இன்று வியாழக்கிழமை (ஜூன் 19) முடிவுக்கு வந்தது.

ஐசிஸ் என்பது மலேசிய அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் பன்னாட்டு கல்வி ஆய்வு, வியூகக் கழகமாகும். செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 17) இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஆசியான் நாடுகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் வந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பேராளர்களுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்துபசரிப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முகமட் பின் ஹாஜி ஹாசான், சிறப்புரை ஆற்றினார்.

தனதுரையில் அவர், நடைமுறைக்கு ஏற்ப செயல்படுதல், அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல், தொடர் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களின் அடிப்படையிலான அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை வலியுறுத்தினார்.

ஐசிஸ் மலேசியா தலைவர் டத்தோ முகமட்  ஃபாயிஸ் அப்துல்லா
#TamilSchoolmychoice

ஆசியா பசிபிக் வட்டாரம் என்பது உலகின் முன்னணி வட்டாரமாகும் என்றும் தொடர்ந்து நிலைத்தன்மையில்லாத உலக அரங்கில் இந்த வட்டாரம் முக்கியமானது என்றும் முகமட் ஹாசான் கூறினார்.

மலேசியா ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தத் தருணத்தில் 38-வது ஆசிய பசிபிக் வட்டமேசை மாநாடு நடைபெறுவது பொருத்தமான ஒன்று என்றும் அவர் வர்ணித்தார்.

அதிகரித்து வரும் தேசிய உணர்வுகள், பருவநிலை மாற்ற அபாயங்கள், பலமுனை ஒத்துழைப்பு நிலைகுத்தியிருப்பது ஆகியவற்றின் சூழல்களில் மலேசியா ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது என்பதையும் குறிப்பிட்ட முகமட் ஹாசான், “நாம் நடப்பவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருக்க முடியாது. இந்த உலகின் குடிமக்கள் என்ற முறையில் ஒருவருக்கொருவர் கடப்பாடு கொண்டிருக்கிறோம்” என்றும் ஹாசான் பேராளர்களுக்கு நினைவுறுத்தினார்.

அயல் நாட்டு தூதர்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அரசாங்க அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மியன்மார் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் கடப்பாட்டையும் மலேசியா கொண்டிருக்கிறது என முகமட் ஹாசான் வலியுறுத்தினார்.

அந்நாட்டுக்கான மனிதாபிமான உதவிகள், ஒருங்கிணைக்கப்பட்ட உதவிகளை  மேற்கொள்ளவும் மியன்மார் பிரச்சனையைத் தீர்த்து வைக்கவும் ஆசியான் முழுமையான கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் ஹாசான் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் பிரச்சனைக்குத் தீர்வு காணும் அதே வேளையில் பாலஸ்தீனம், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்தார் முகமட் ஹாசான்.