Home Photo News முரசு அஞ்சல் புதிய பதிப்பு – திரளான மக்கள் முன்னிலையில் வெளியீடு!

முரசு அஞ்சல் புதிய பதிப்பு – திரளான மக்கள் முன்னிலையில் வெளியீடு!

44
0
SHARE
Ad
முரசு அஞ்சல் புதிய பதிப்பை வெளியிட்டு விளக்கமளிக்கும் முத்து நெடுமாறன்

பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான  முத்து நெடுமாறன் அவர்களின் கைவண்ணத்திலும் சிந்தனையிலும்,  புதிய தொழில்நுட்ப சேர்க்கைகளோடு, அவரின் நீண்ட கால உழைப்பின் பயனாக. உருவாகியிருக்கும் முரசு அஞ்சல் தமிழ் மென்பொருள் புதிய பதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை  (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவில் கோலாகல வெளியீடு கண்டது.

வழக்கமாக பிரமுகர்கள் யாரும் இந்த மென்பொருளை வெளியிடாமல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்த பங்கேற்பாளர்கள் – முரசு அஞ்சலின் பயனர்கள் ஆகியோரே இணைந்து இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருளை வெளியீடு செய்வது போல் நிகழ்ச்சி கட்டமைக்கப்பட்டிருந்தது வித்தியாசமான ஒன்றாகும்.

500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்திருந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

முதல் அங்கம் – அறிவார்ந்த உள்ளிடுகள்

#TamilSchoolmychoice

மூன்று அங்கங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் அங்கத்தில் ‘அறிவார்ந்த உள்ளிடுகள்’ என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய உள்ளிடுகள் குறித்து விளக்கம் தந்தார். முரசு அஞ்சலின் தொடக்கம், அதன் தொடர்ச்சியான பயணம், அடைந்த தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்தும் முத்து நெடுமாறன் திரையில் காட்சிகளுடன் சுவைபட விவரித்தார்.

இரண்டாவது அங்கம் –
அழகு தமிழ் எழுத்துருக்கள்

நிகழ்ச்சியின் இரண்டாவது அங்கமாக நடத்தப்பட்ட ‘அழகு தமிழ் எழுத்துருக்கள்’ என்ற அங்கத்தில் தமிழ் எழுத்துருக்களின் முக்கியத்துவத்தையும் அவற்றின் அத்தியாவசியத்தையும் எடுத்துரைத்த முத்து நெடுமாறன் புதிய மென்பொருளில்  மேலும் கூடுதலான அழகான எழுத்துருக்கள் இதற்கென உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முரசு அஞ்சல் மென்பொருள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தர பதிவு செய்திருந்த அனைவருக்கும் இந்த புதிய மென்பொருளை வாங்குவதற்கான சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

பயனர்களுக்கு இலவச பதிப்பு ஒன்று வழங்கப்படும் என்றும் தனிநபர் பதிப்பு வணிகப் பதிப்பு என இரண்டு பிரிவுகளில் அதற்குரிய கட்டணங்களுடன் இந்த மென்பொருள் விற்பனைக்கு வருகிறது என்றும் முத்து நெடுமாறன் தனது விளக்க உரையில் தெரிவித்தார்.

முரசு அஞ்சலின் புதிய அம்சங்கள்

முரசு அஞ்சல் மென்பொருள் கொண்டிருக்கும் பல புதிய அம்சங்களையும் திரையில் காட்சிகளுடன் முத்து நெடுமாறன் விளக்கினார்.

சொற்களுக்கான விளக்கம் –  சொற்கள் சரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற பரிந்துரை – அகராதி மூலம் சொற்களுக்கான பொருள் விளக்கம் தேடுதல் – ஒரு சொல்லைத் தட்டச்சு செய்யும்போது அந்த சொல் சரியான முறையில் எழுத்துப் பிழையின்றி இருக்கிறதா என்ற பரிந்துரை – தட்டச்சு செய்யும் சொல்லுக்கு அடுத்த பொருத்தமான சொல்லை தானாகவே மென்பொருள் பரிந்துரை செய்வது – திருக்குறள், பழமொழிகள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் பாடல்களை முரசு அஞ்சலின் புதிய பதிப்பில்  உள்ளிடு செய்திருப்பதன் மூலம், அந்தத் திருக்குறள் அல்லது பாடல்களின் முதல் சொல்லைத் தேர்வு செய்தால், அடுத்தடுத்த சொற்களும் இறுதியில் முழு வடிவிலான திருக்குறளும், பழந்தமிழ்ப் பாடல்களும் தட்டச்சு செய்யும்போது அடுத்தடுத்து தோன்றுவது – போன்ற பல புதிய அம்சங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் பாராட்டுக்களைப் பெற்றதைப் எழுந்த கரவொலிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த வெளியீடு சிங்கப்பூர் – இந்தியா

மூன்று நாடுகளில் அடுத்தடுத்து நடத்தப்படுவதற்கு முரசு அஞ்சல் மென்பொருள் வெளியீட்டு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அதில் முதல் கட்டமாக மலேசியாவுக்கான வெளியீடு பெட்டாலிங் ஜெயாவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெற்ற வேளையில் அடுத்த வெளியீடு சிங்கப்பூரில் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும்.

எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 12-ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மண்டபத்தில் இந்தியாவுக்கான முரசு அஞ்சல் வெளியீடு  நடைபெறும்.