Home இந்தியா நரேந்திர மோடி பிரதமர் ஆவார்- கருத்து கணிப்பில் தகவல்

நரேந்திர மோடி பிரதமர் ஆவார்- கருத்து கணிப்பில் தகவல்

509
0
SHARE
Ad

modi-narendraபுதுடெல்லி, மே 22- மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றுடன் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றி நகர பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களின் நன் மதிப்பை இழந்ததோடு மட்டுமல்லாது பிரதமர் மன்மோகன் சிங் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

61 சதவீத மக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 37 சதவீதம் பேர் பிரதமராக மன்மோகன்சிங் தொடர்ந்து நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 சதவீதம் மக்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

நான்கு ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி எப்படி? என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு 67 சதவீதம் பேர் மக்களின் நம்பிக்கைய அரசு இழந்து விட்டதாக கூறியுள்ளனர். வேறு வழியில்லாத பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று 31 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 56 சதவீத மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். 4 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக அதிக ஆதரவு கிடைத்துள்ளது. 38 சதவீத மக்கள் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். நரேந்திரமோடியை அடுத்து ராகுல்காந்தி பிரதமராக 14 சதவீதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 13 சதவீதம் பேரும், சோனியாகாந்தி பிரதமராக 6 சதவீதம் பேரும், எல்.கே.அத்வானி பிரதமராக 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடி ஏன் பிரதமராக வேண்டும் என்பதற்கு? அவரது திறமை மற்றும் அவரது முடிவு உறுதியான முடிவு எடுக்கும் திறன் ஆகியவை காரணம் என்கின்றனர் 41 சதவீதம் பேர். மேலும் அவரது நல்ல ஆட்சி வர்த்தகர்களிடையே உள்ள நட்பு ஆகியவையும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்பதற்கான காரணம் என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்திக்கு பிரதமராக போதிய அனுபவமில்லை என்று 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமராக 17 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜி பிரதமராக 16 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக கூறினாலும் மன்மோகன்சிங் நேர்மையானவர் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது நேர்மை கடந்த ஓராண்டில் ஊழல் காரணமாக குறைந்து விட்டதாக 24 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் அதிகரித்து விட்டதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் ஊழலில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், 8 சதவீதம் பேர் ஊழல் குறைந்து இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என்றும் கூறும் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கிடு வழக்கில் நேரிடையாக சம்பந்தப்பட்டுள்ளதாக 65 சதவீதம் பேர் குற்றம் சுமத்துகின்றனர். 28 சதவீதம் பேர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஊழல் வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

நகர பகுதிகளில் தற்போது ஊழல் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் நேரத்தில் விலைவாசி உயர்வும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 53 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே பெரும் பிரச்சினையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் லஞ்ச ஊழலும், 8 சதவீதம் பேர் மக்கள் பாதுகாப்பு பற்றியும் கருத்து தெரிவித்துள்ளனர்.