Home 13வது பொதுத் தேர்தல் “தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு நஜிப்பின் தவறான வியூகமே காரணம்” – டாயிம் கருத்து

“தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு நஜிப்பின் தவறான வியூகமே காரணம்” – டாயிம் கருத்து

547
0
SHARE
Ad

imageகோலாலம்பூர், மே 28 – நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு அக்கட்சியின் தலைவரான நஜிப் துன் ரசாக்கின் தவறான வியூகங்களே காரணம் என்று முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின்(படம்) கருத்து தெரிவித்துள்ளார்.

அதோடு தேசிய முன்னணியின் உட்கட்சிப் பூசல்களும் அதன் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் என்று சீனா பிரஸூக்கு அளித்த நேர்காணலில் டாயிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அம்னோ தலைமைக் குழு உறுப்பினரான டாயிம் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது,

#TamilSchoolmychoice

“ கடந்த 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி இழந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை, இந்தத் தேர்தலில் பெற்றுவிடும் நோக்கில் நஜிப் தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு நாடாளுமன்றத் தேர்தல் தானே தவிர ஜனாதிபதி தேர்தல் அல்ல.”

“பிரதமரின் ஆலோசகர்களை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். காரணம் “தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்கு நஜிப்புக்கு அளிக்கும் வாக்கு” என்று கூறினால், தேசிய முன்னணியின் பின்னடைவு நஜிப்பின் பின்னடைவாகவே கருதப்படும்”

“எனவே தேர்தல் மூலம் அரசாங்கத்தை அமைப்பது என்பது ஒரு வியாபாரம். இனியாவது இது போன்ற வேடிக்கை வியூகங்களை விட்டு விலகி, தனது விளையாட்டை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“தேசிய முன்னணி சீன மக்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளிலும், நகர்புறங்களிலும் தோல்வியைச் சந்தித்ததற்கு வேட்பாளர்கள் இடமாற்றங்களே காரணம்” என்றும் டாயிம் கூறியுள்ளார்.

“இலவச இரவு விருந்துகளிலும், நட்சத்திர கலை நிகழ்ச்சிகளிலும் அதிகளவு பணத்தையும், நேரத்தையும் வீணாக்கியதற்குப் பதிலாக, கடந்த தேர்தலில் தாங்கள் மிகக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் தோல்வியுற்ற தொகுதிகளையும், வெற்றி பெற்ற தொகுதிகளையும் வலுப்படுத்தி இருக்கலாம்.

அதே நேரத்தில் மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு நாட்டின் ஊழல், பாதுகாப்பு, கல்வி, நகர்ப்புற ஏழை மற்றும் இளம் பட்டதாரிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி தோல்வியுற்றதற்கு தேர்வு செய்யப்பட்ட தவறான வேட்பாளர்கள் மற்றும் மோதல்களும், பிரச்சனைகளும் தான் காரணம்” என்று டாயிம் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.