Home நாடு “உதயாவை இருட்டு அறையில் அடைத்து விடுவதாக சிறை நிர்வாகம் மிரட்டுகிறது” – இந்திரா

“உதயாவை இருட்டு அறையில் அடைத்து விடுவதாக சிறை நிர்வாகம் மிரட்டுகிறது” – இந்திரா

498
0
SHARE
Ad

uthayakumarகோலாலம்பூர், ஜூலை 25 – காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான முதுகுவலியை போக்க, சிறை நிர்வாகம் அவருக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துள்ளது.

ஆனால் இதற்கு மேலும் புகார் அளித்தால் உதயகுமாரை இருட்டு அறையில் அடைத்துவிடுவதாக சிறை நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளதாக உதயகுமாரின் மனைவி எஸ்.இந்திரா தேவி கூறியுள்ளார்.

“சிறை நிர்வாகம் அவருக்கு கடந்த வியாழக்கிழமை தலையணை வழங்கியது மற்றும் கடந்த திங்கட்கிழமை நாற்காலி வழங்கியது. ஆனால் இதற்கு மேலும் புகார்கள் அளித்தால் அவரை இருட்டறையில் அடைத்துவிடுவதோடு, அவரது கைப்பேசி உரிமையையும் பறித்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்” என்று இந்திரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காஜாங் சிறையில் இருக்கும் உதயகுமாருடன் ஒவ்வொரு புதன்கிழமையும் 15 நிமிடங்கள் பேசுவதற்கு இந்திராவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும் தனது கணவருக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இந்திரா கூறுகிறார்.

“உதயகுமாருக்கு உள்ள முதுகுத்தண்டுவட பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. தனது கால்கள் வீங்கியுள்ளதாக என் கணவர் கூறுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி கெபாங்சான் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதற்காக அவரை அழைத்துச்செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுகிழமை இந்திரா வெளியிட்ட தனது அறிக்கையில், தனது கணவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவருக்கு பக்கவாத நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.