ஜோஹன்னஸ்பர்க், ஜூலை 28 – தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவரும் ஜொஹன்னா மசிபுகோ என்ற 119 வயதுடைய பெண்மணியே உலகில் அதிக வயதானவராகக் கண்டறியப்பட்டுள்ளார்.
இவருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்து பேர் இறந்து விட்டனர். இந்த வயதிலும் இவர் சமைத்து, துணி துவைத்து தன்னைத் தானே பார்த்துக் கொள்வதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றார். அவரால் நீண்ட நேரம் நிற்கமட்டும் முடிவதில்லை என்று அவரது மகன் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க அரசு இன்னும் இவரது வயது குறித்த அத்தாட்சிகளை சரிபார்த்துக் கூறவில்லை. ஆயினும், அவரது அத்தாட்சிப் பிரதிகளைப் பார்வையிட்டதாக பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது. இதுவரை அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122-வது வயதில் கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி இறந்துபோனார்.