Home 13வது பொதுத் தேர்தல் “ஆமாம் என்று தலையாட்டிய காலம் ஓடிவிட்டது” – ம.இ.கா மத்திய செயலவை வேட்பாளர்

“ஆமாம் என்று தலையாட்டிய காலம் ஓடிவிட்டது” – ம.இ.கா மத்திய செயலவை வேட்பாளர்

538
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், நவ 26 – வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய செயலவை உறுப்பினர் பதவியின் (Central working committee) மேல் தான் அத்தனை அரசியல் ஆர்வலர்களின் பார்வையும் திரும்பியுள்ளது.

காரணம், போட்டியிடும் 88 மத்திய செயலவை வேட்பாளர்களும் ம.இ.கா அடிப்படை உறுப்பினர்களிடம் புதிய மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்திவருகின்றனர்.

“உயர் பதவிகளில் இருப்பவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதானால், மத்திய செயலவைக்கு என்ன தான் உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுந்துள்ளது” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத அரசியல் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அப்பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரங்களில் மாற்றம் வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்திவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“பெரும்பாலான முடிவுகளை ஏற்கனவே கட்சியிலுள்ள உயர் தலைவர்கள் எடுத்துவிட்டு, உறுப்பினர்களை முன்கூட்டியே வாக்களிக்குமாறு கூறுவது தான் நடக்கிறது” என்று முன்னாள் ம.இ.கா தலைவர்களுள் ஒருவர் கூறினார்.

“இதன் விளைவாக ஒரு அர்த்தமுள்ள அரசியல் மற்றும் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன” என்றும் 20 வருடங்களாக ம.இ.காவில் இருந்து வரும் அந்த மூத்த தலைவர் குறிப்பிட்டார்.

கட்சித் தொகுதிகளில் திருத்தம், கொள்கைகளில் தேவையான மாற்றங்கள் போன்றவற்றால் மேலும் பல புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நல்ல கல்வி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றங்களை  ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய செயலவை தற்போது உறுப்பினர்களை எதிர்கொண்டு வருகின்றது.

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான கட்சியில் முடிவுகள் எடுப்பது என்பது அனைவருக்கும் பொதுவானது, வெளிப்படையானது என்று நடப்பு மத்திய செயலவை உறுப்பினரான டத்தோ ஆர்.ரகுமூர்த்தி கூறினார்.

“பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டும்,சமுதாயத்திற்கு ஏற்படும் அதன் விளைவுகள் அறிந்தும் தான் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படுகிறது” என்றும் ரகுமூர்த்தி குறிப்பிட்டார்.

“ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டிருந்த காலம் ஓடிவிட்டது.இப்போது குறைகளை நேரடியாக எந்த ஒரு பயமும் இன்றி சுட்டிக்காட்டும் நிலை வந்துவிட்டது” என்று போட்டியிடும் 88 வேட்பாளர்களில் ஒருவரும், 4 வருட காலம்  மத்திய செயலவை உறுப்பினராக இருந்தவருமான மது மாரிமுத்து தெரிவித்தார்.

பழனிவேலின் ஊக்கத்தினால் இப்போது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதற்கும், தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதற்கும் கட்சியில் முழு உரிமை உள்ளது என்று முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியத்தின் மகனான சுந்தர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.