Home இந்தியா ஊட்டியில் புலி தாக்கி மூவர் பலி! பீதியில் கிராம மக்கள்!

ஊட்டியில் புலி தாக்கி மூவர் பலி! பீதியில் கிராம மக்கள்!

654
0
SHARE
Ad

tigerஊட்டி, ஜன 9 – தமிழகத்தில் மிகப் பிரபல சுற்றுலாத்தலமான ஊட்டியில் கடந்த நான்கு நாட்களில் 3 பேர் புலி தாக்கி கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது 32) மற்றும் தொட்டபெட்டா என்ற பகுதியிலுள்ள அட்டபெட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் (வயது 58) ஆகியோர் அடுத்தடுத்து புலியால் கொல்லப்பட்டனர்.

நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் தூனேரி பகுதியில் உள்ள ராமுகுட்டி என்பவரது வீட்டின் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகையில் நுழைந்த புலி, அங்கு கட்டிப்போடப்பட்டிருந்த கன்றுக்குட்டி தாக்க முயன்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த எபி பிரகாஷ் என்பவரின் மனைவி முத்துலட்சுமியை (வயது 38) அவரது கண் முன்னரே புலி கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

இது குறித்து எபி பிரகாஷ் கூறுகையில், “நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென என் மனைவி முத்துலட்சுமி அலறும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்த போது, கீழே கிடந்த அவரை, புலி இழுத்துச்சென்று கொண்டிருந்தது. நான், என் மனைவியின் காலை பிடித்து இழுக்க முயற்சித்தபோது, புலி என் மீது பாய முயற்சித்தது. நான் சுதாரித்து, அதன் மீது கல் வீசி எறிந்தேன். அதனால் புலி தேயிலை தோட்டத்துக்குள் ஓடி விட்டது. நான் உயிர் பிழைத்து விட்டேன். ஆனால் என் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

புலியை பிடிக்க கூண்டு

புலியை பிடிக்க தொட்டபெட்டா அருகே சோலாடாவில் இரு கூண்டுகளும், அட்டபெட்டு, சின்கோனா, கரிமுடக்கு வனப்பகுதிகளில் தலா ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

கூண்டில் புலி பிடிபடாத நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயிர்பலிகளால் வனப்பகுதியை ஒட்டியுள்ள 100 கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். புலி நடமாட்டத்தில் 45 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

தொட்டப்பெட்டா என்பது ஊட்டியிலுள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம். அதன் அருகே இந்த உயிர்பலி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிகரம் வரை உள்ள 1.5 கி.மீ தூரத்துக்கு யாரும் நடந்து செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.

மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா “பேண்ட் ஸ்டாண்ட்’ பகுதிக்கு மேல்புறமுள்ள வனப்பகுதியில் மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பகுதியில் பூங்கா ஊழியர்கள் நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளை கீழ்பகுதிக்கு அனுப்புகின்றனர்.