Home அரசியல் அன்வாருடன் விவாத மேடை – 2000 பேர் முன்னிலையில் நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள் பங்கேற்பு

அன்வாருடன் விவாத மேடை – 2000 பேர் முன்னிலையில் நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள் பங்கேற்பு

671
0
SHARE
Ad

Anwar-feature--3

பிப்ரவரி 15 – நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களுடன், ஏறத்தாழ 2,000 பேர் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட புதுமையான “விவாத மேடை நிகழ்ச்சி” நேற்று இரவு கிள்ளான் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

செம்பருத்தி.கோம் செய்தி இணையத் தளத்தின் ஏற்பாட்டில், வழக்கறிஞர் கா.ஆறுமுகம் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்து இந்த வித்தியாசமான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

தமிழ் நேசன் சார்பாக பத்மநாபன், மக்கள் ஓசை சார்பாக எம்.இராஜன், மலேசிய நண்பன் சார்பாக கேசவன், தினக்குரல் சார்பாக பி.ஆர்.ராஜன் ஆகியோர் இந்த விவாத மேடையில் கலந்து கொண்டு அன்வார் இப்ராகிமிடம் பொதுமக்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தங்களின் கேள்விகளை முன்வைத்தனர்.

செம்பருத்தி.கோம் இணையத் தள ஆசிரியர் ஏ.வி.காத்தையாவும், இயக்கங்களின் சார்பாக குணராஜ், மற்றும் உதயசூரியன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நம்நாடு தமிழ்ப் பத்திரிக்கையின் சார்பில் யாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்நாடு பத்திரிக்கை ஆசிரியருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா அல்லது அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் அழைப்பை ஏற்கவில்லையா என்பது குறித்தும் நிகழ்ச்சியில் எந்தவித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு மணி நேரம் அரங்கம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்வார் இப்ராகிம் உரையாற்றியதோடு பல்வேறு கோணங்களில், பல்வேறு அம்சங்களைத் தாங்கிய கேள்விகளுக்கு விரிவான பதில்களை கலகலப்புடன் வழங்கினார்.

ஏறத்தாழ அனைத்து கேள்விகளுமே அன்வார் பிரதமரானால், தற்போது பிற்படுத்தப்பட்டநிலையில் இருக்கும் இந்தியர்களின் வாழ்வில் ஒளிகாட்ட, முன்னேற்றத்தைக் கொண்டுவர பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது பற்றியதாகவே இருந்தது.

இந்த கூட்டத்தில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.