இறுதி மரியாதை செலுத்தியவர்களில் பினாங்கு மாநில ஆளூநர் துன் அப்துல் ரஹ்மானும் அடங்குவார். அவர் மரியாதை செலுத்த வந்தபோது பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் உடன் வந்தனர்.
சீக்கிய மத முறைப்படி கர்ப்பாலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தேறின.
அதன் பின்னர் அவரது நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மீது புலியின் படம் கொண்ட துணி போர்த்தப்பட்டது.
அவரது நல்லுடல் தாங்கிய சவப் பெட்டியை அவரது மகன்களும் குடும்ப உறுப்பினர்களும் ஏந்தியபடி மண்டபத்தை விட்டு வெளியில் வர, காலை 11.30 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.
பத்து கந்தோங் மின் சுடலை மயானத்தை நோக்கிச் சென்ற கர்ப்பாலின் இறுதி ஊர்வலம், அவரது நினைவுக்காக மூன்று இடங்களில் மரியாதைக்காக நிறுத்தப்பட்டது.
கர்ப்பால் வழக்கறிஞராக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்த பினாங்கு உயர்நீதிமன்றக் கட்டிடம், அவர் சட்டமன்ற உறுப்பினராக அரசியல் பணியாற்றிய பினாங்கு மாநில சட்டமன்றக் கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலம் மரியாதைக்காக நிறுத்தப்பட்டது.
பிற்பகல் 1.30 மணியளவில் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம் பத்து கந்தோங் மின் சுடலை மயானத்தை சென்றடைந்தது.
அதன் பின்னர் கர்ப்பாலின் நல்லுடல் சீக்கிய மத அடிப்படையிலான சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.