Home அவசியம் படிக்க வேண்டியவை மஇகாவின் செனட்டர் பதவிகள் யாருக்கு?ஆரூடங்கள் தொடர்கின்றன

மஇகாவின் செனட்டர் பதவிகள் யாருக்கு?ஆரூடங்கள் தொடர்கின்றன

646
0
SHARE
Ad

MIC Logo 440 x 215கோலாலம்பூர், ஏப்ரல் 24 – மஇகா சார்பாக காலியாகவுள்ள செனட்டர் பதவிகளை 3  புதுமுகங்களுக்கு வழங்க மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் முடிவு செய்துள்ளார் என்று ஃப்ரி மலேசியா டுடே இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

மஇகாவின் உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன், கட்சியின் தலைமைப் பொருளாளர் எஸ்.முருகேசன், மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதி உதவித் தலைவர் வி.முகிலன் ஆகியோரை செனட்டர்களாக கட்சியின் தேசியத் தலைவர் முன்மொழிந்திருப்பதாக தெரியவருகிறது.

கடைசி நேரத்தில் முகிலனுக்கு பதிலாக வேறு யாருக்காவது இந்த செனட்டர் பதவி வழங்கப்படலாம் என மற்றொரு ஆரூடச் செய்தி கூறுகின்றது.

இதற்கிடையில், மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவிடம் இதுபற்றி கேட்டபோது இதுபற்றி தமக்கு ஏதும் தகவல் வரவில்லை என்றும், காலியாக உள்ள செனட்டர் பதவிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மஇகா சார்பில் மூவர் செனட் சபையில் இடம் பெற்றிருக்கின்றனர்.

அவர்கள் டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ வி.சுப்ரமணியம், ஏ.சிவபாக்கியம் ஆகியோர் ஆவர்.

இதற்கிடையில் கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.காவின் சட்டமன்ற தொகுதி ஒன்றை  அம்னோவிற்கு  ஒதுக்கியதற்கு பதிலாக மஇகாவுக்கு மற்றொரு செனட்டர் பதவி ஒதுக்கப்படும் என பொதுத் தேர்தல் சமயத்தில் தேசிய முன்னணி தலைமைத்துவம் வாக்குறுதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு செனட்டர்களுக்கான பதவிகள் ம.இ.கா சார்பாக இன்னும் நிரப்பப் படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.