Home நாடு எம்எச் 370 – அடுத்த கட்ட தேடுதல் பணிக்கு 180 மில்லியன் ரிங்கிட் செலவாகும்.

எம்எச் 370 – அடுத்த கட்ட தேடுதல் பணிக்கு 180 மில்லியன் ரிங்கிட் செலவாகும்.

428
0
SHARE
Ad

புத்ராஜெயா, மே 6-டுவானில் மாயமாய் மறைந்து போன எம்எச்370 விமானத்தை தேடும் பணி தொடரும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்திருக்கும் வேளையில் புதிய அடுத்த கட்டத்தை அடைந்துள்ள இந்த தேடுதல் பணிக்கு மேலும் 180 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகும் என ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் டிரஸ் அறிவித்துள்ளார்.

talks about search for missing MH370(படம்: நேற்று கான்பெராவில் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பில் ஹிஷாமுடின், வாரன் டிரஸ், சீனத் தூதர்)

#TamilSchoolmychoice

அந்த போயிங் 777-200 ரக விமானத்தை தேடும் பணி 59 நாட்களை கடந்து விட்டபோதிலும், தனது அண்டை நாடுகளின் உதவியோடு அத்தேடுதல் பணியை மலேசியா தொடர்ந்து முன்னெடுக்கும் என நஜிப் கூறியுள்ளார்.

காணாமல் போன அந்த விமானத்தின் நிலைமை தெரியாது, பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களின் துணையோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேடுதல் வேட்டை, விமான போக்குவரத்துத்துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய சோதனை கலந்த சவாலாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

விமானத் தேடல் நடவடிக்கையின் முடிவு இதுவரைக்கும் தெரியாத போதும், அண்டை நாடுகளின் ஒத்துழைப்போடு தேடுதல் பணி தொடரப்படும். இதற்கு ஆஸ்திரேலியா மிகப் பெரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்றும் நஜிப் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளார்.

இதுவரை தேடுதல் பணிகளினால் கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து, ஆராய்ந்து அடுத்த கட்ட தேடுதல் பணிகளில் ஈடுபட மேலும் 180 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படும் என இப்பேச்சு வார்த்தைக்குப் பின்னர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கைக்கான முகாமாக  பெர்த் நகர் தொடர்ந்து செயல்படும் என்றும் ஆனால் தேடுதல் பணிகளுக்கான கூட்டு ஒருங்கிணைப்பு மையம் இனி வசதி கருதி கான்பெர்ராவில் இருந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் : EPA