Home இந்தியா மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு – வைகோ எதிர்ப்பு!

மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு – வைகோ எதிர்ப்பு!

497
0
SHARE
Ad

vaikoசென்னை, மே 22 – இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே இலங்கைப் போரில் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எதிர்கொண்டது.

தமிழக மீனவர்களின் நலனைக் காக்க அந்த கட்சி தவறிவிட்டது. இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடியின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, ராஜபக்ஷவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராஜபக்ஷ கலந்துகொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் “பேரிடியாகத் தாக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தியாவுக்கு ராஜபக்ஷ வருவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக்கொள்ள இயலாது, என்று கூறியிருக்கும் வைகோ, ” ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது.

எனவே, இலங்கைக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார். 1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும், 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகிந்த ராஜபக்ஷ, புது டெல்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும் என்றும் வைகோ கூறியிருக்கிறார்.

எனவே மஹிந்த ராஜபக்ஷவை , பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க அனுமதிக்க வேண்டாம் என்று, பிரதமராகப் போகும் நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார் வைகோ.