Home தொழில் நுட்பம் 5ஜி தொழில்நுட்பத்தினை உருவாக்கி வரும் ஜிடிஇ நிறுவனம்!

5ஜி தொழில்நுட்பத்தினை உருவாக்கி வரும் ஜிடிஇ நிறுவனம்!

598
0
SHARE
Ad

5gபெய்ஜிங், ஜூன் 17 – சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஜிடிஇ’ (ZTE), எதிர்காலத்தில் பயனர்களுக்கான இணைய தேவைகளைக் கருத்தில் கொண்டு 5ஜி தொழில்நுட்பத்தினை உருவாக்கி வருகின்றது. இதற்கான முன்னோட்டம் வரும் 2015-ம் ஆண்டு வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.      

உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அதனால் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆளாகியுள்ளன.

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பிற வளர்ந்த நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. இது 100 எம்பி முதல் 2 ஜிபி வரை வேகம் கொண்டதாக உள்ளது. எனினும், வரும் காலத்தில் பயனர்களின் தேவைகளை கணக்கிடும் பொழுது புதிய தொழில்நுட்பத்திற்கான தேவை அவசியமாகின்றது. இதனை கருத்தில் கொண்டு ஜிடிஇ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கின்றது.

இது பற்றி ஜிடிஇ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஸு ஹுய்ஜூன் கூறுகையில், “5ஜி தொழில்நுட்பத்தினை செயல்படுத்த ஜிடிஇ நிறுவனம் பல்வேறு முதலீடுகளை செய்து வருகின்றது. எதிர்வரும் 2015-ம் ஆண்டு, இதற்கான முதன்மை முன்மாதிரி வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

சீனாவின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜிடிஇ நிறுவனம், 4ஜி தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு 5ஜி-ஐ உருவாக்கிவருவதாக கூறப்படுகின்றது. இந்த 4ஜி தொழில்நுட்பத்திற்கான 800 அத்தியாவசிய காப்புரிமைகளை அந்நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.