Home நாடு நாளை நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை திடீரென ஒத்திவைப்பு!

நாளை நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை திடீரென ஒத்திவைப்பு!

520
0
SHARE
Ad

mic,கோலாலம்பூர், ஜூலை 16 – மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை நடைபெறவிருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் திடீரென காரணமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ம.இ.காவில் பல்வேறு சர்ச்சைகள் மீண்டும் விசுவரூபம் எடுத்து பத்திரிக்கைகளில் அறிக்கைகள் வடிவில் மறைமுகப் போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2013 நவம்பரில் நடைபெற்ற கட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக சங்கங்களின் பதிவதிகாரிக்கு புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கடந்தாண்டு நடைபெற்ற ம.இ.கா கோத்தா ராஜா தொகுதியின் தேர்தல் செல்லாது என்று அளிக்கப்பட்ட புகார்கள் மீது விளக்கம் தருமாறு ம.இ.கா தலைமையகத்தை சங்கப் பதிவகம் பணித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரங்கள் எல்லாம் நாளை நடைபெறும் மத்திய செயலவையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

s-sammyமுன்னாள் தலைவர் சாமிவேலு மீது பத்திரிக்கை யுத்தம்

இவை ஒரு புறமிருக்க, ஒரு குறிப்பிட்ட தமிழ் நாளிதழ் தொடர்ந்து முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்றதாக சில குற்றச்சாட்டுகளை கடந்த ஓரிரு வாரங்களாக பிரசுரித்து வந்தது.

அதில் மையப் பிரச்சனையாக கூறப்பட்டது, ஜோகூரில் 1000 ஏக்கர் வரையிலான நிலங்கள் வழங்கப்பட்டதாகவும் அந்த நிலங்கள் தற்போது சில தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் கைவசம் சென்றுவிட்டதாகவும் எழுந்த புகார்களாகும்.

இதுகுறித்து, சாமிவேலு தரப்பிலும் விளக்கங்கள் தரப்பட்டது. அவரது புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரியும் சில விளக்கங்கள் தந்திருந்தார்.

இருப்பினும், தொடர்ந்து கொண்டிருந்த பத்திரிக்கை யுத்தம் தற்போது திசை திரும்பி, எம்.ஐ.இ.டி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவை ம.இ.கா வசம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளாக – மஇகா தலைவர்களின் அறிக்கைகளாக பத்திரிக்கைகளில் இடம் பெற்று வந்தன.

MIC-President-Palanivelஇத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான், நாளை மத்திய செயலவை நடைபெறும் என இரண்டு வாரங்களுக்கு முன்னால் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

நடப்பு விவகாரங்களினால் நாளை நடைபெறும் மத்திய செயலவையில் கடுமையான சர்ச்சைகளும், கருத்து மோதல்களும் எழும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில்தான் மத்திய செயலவை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய செயலவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை செல்லியல் தகவல் ஊடகத்திடம் உறுதிப்படுத்திய பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர், தான் சாமிவேலு காலத்திலும் மத்திய செயலவை உறுப்பினராக இருந்து வருவதாகக் கூறி சில கருத்துகளை முன்வைத்தார்.

“முன்பெல்லாம் சாமிவேலு காலத்தில் எவ்வளவோ அரசியல் போராட்டங்களுக்கிடையிலும் மாதம் தவறாமல் மத்திய செயலவை நடைபெறும். மணிக்கணக்கில் பல விவாதங்கள் நடைபெறும். சாமிவேலுவிடம் நேருக்கு நேராகவே பல விவாதங்கள், கருத்து மோதல்கள் நிகழும்.

MIC-logoஆனால் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் மத்திய செயலவை கூட்டப்படுகின்றது. அதுவும் குறுகிய காலத்திலேயே விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் மத்திய செயலவைக் கூட்டங்கள் முடிந்து விடுகின்றன.

அப்படியே மத்திய செயலவை கூட்டப்பட்டாலும், இப்போது போன்று திடீரென முறையான காரணமின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. மத்திய செயலவை கூட்டம் என்னும் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உறுப்பினர்கள் வருகின்றார்கள் என்பதால் அவர்கள் முன்கூட்டியே சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது” என விரக்தியுடன் அந்த மத்திய செயலவை உறுப்பினர் தெரிவித்தார்.