Home நாடு கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 18 -ம் ஆண்டு விழா!

கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 18 -ம் ஆண்டு விழா!

668
0
SHARE
Ad

Balagopalan

கிள்ளான், செப்டம்பர் 4 – கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 18- ஆம் ஆண்டு விழா, இலக்கியச் சோலை 13, வருகிற செப்டம்பர் 14- ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, கிள்ளானிலுள்ள எம்.ஜி.ஆர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, இந்த வருடம் இயக்கத்தின் பெருமைமிக்க 111 -வது நிகழ்ச்சியாகும்.

#TamilSchoolmychoice

கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் தலைவர் ‘சங்கரத்னா’ சித. ஆனந்தகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கிறார். இயக்கத்தின் புரவலரும், சிலாங்கூர் மாநில ம.இ.கா ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு. மா.கோபாலகிருஷ்ணன் பி.ஜே.கே. அவர்கள் இந்நிகழ்வில் முன்னிலை வகிக்கிறார்.

இது குறித்து கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் பாலகோபாலன் நம்பியார் (படம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இயக்கத்தின் இவ்வாண்டு கருப்பொருள்: ‘பாரதிரப் பாடிய பாரதி தமிழ்ச் சாரதி’ என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் பற்றிய நினைவலைகள் நிகழ்ச்சியினூடே இடம்பெறும்.”

‘பாரதியார் பாடல்களின் தாக்கம்’  என்ற தலைப்பில் மக்கள் ஓசை சங்கச் செய்தி ஆசிரியர் திரு. ராமதாஸ் மனோகரன் அவர்கள் உரையாற்றுவார். பாரதியாரின் பாடல்களைத்தொட்டு 10 நிமிட நகைச்சுவை ஓரங்க நாடகம் இடம்பெறும். பாரதியார் பற்றிய அரிய, சுவையான 20 நிமிட காணொளி இடம்பெறும். மேலும் பாரதியார் பாடல்களுக்கும், (மெட்லி) என்ற பல கலப்பு நிறைந்த பாடல்களுக்கும் புகழ்பெற்ற கிள்ளான் ஸ்ரீ ரெங்கநாதர் பரதாலய மாணவிகள் நடனமாடி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்ப்பார்கள்.”

“புகைப்படம் பார்த்து திடீர்க்கவிதை எழுதும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்கலாம். வெற்றிபெற்ற நால்வருக்கு ரொக்கமும், நூல்களும் பரிசாக வழங்கப்படும். பங்கெடுத்த அனைவருக்கும் நூல்கள் பரிசாக வழங்கப்படும். பாரதியைப் பற்றிய போட்டி அங்கமும் உண்டு. மேலும், இந்நிகழ்ச்சியில் ஒருவருக்கு வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு சிறப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மற்றொரு சிறப்பு அம்சமாக, 1330 திருக்குறளையும் மிக அழகாக சொல்லும் 11 வயது சிறுமி செல்வி இலக்கியா ஜெயராமன், பாரதியார் போல் வேடமிட்டு அவரின் பாடல்களைப் பாடவுள்ளார் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வாசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் :

எம்.ஜி.ஆர். மண்டபம்
No: 11-B, Jalan Raya Timur KS/1,
Pusat Bandar, Klang
(Opposite Komuter Railway Station / Beside Bismillah Restaurant)

மேல் விவரங்களுக்கு:

பாலகோபாலன் நம்பியார் – தலைவர் – 017-3356952
வீ. சிவகுமார் – பொருளாளர் – 017-3381414
திருமதி அல்லிராணி கன்னியப்பன் – 012-2683264