ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏ.வி.எம் வளாகத்தில் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம்.
அப்போது படப்பிடிப்புக்கு வந்த முருகதாஸும், விஜய்யும் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லையாம்.
அன்றைய தினம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லையாம். இதனால் அன்றைய தினம் எடுக்கவிருக்கும் காட்சிகளை முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் கூற உதவியாளர்கள் விஜய்யிடம் காட்சியை விளக்கினர்.
விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததால் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று முருகதாஸின் உதவியாளர்களுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் இவ்வளவு வில்லங்கமானவர் என்பதை முருகதாஸ் தன்னிடம் திட்டமிட்டே மறைத்ததாக விஜய் நினைப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகின்றன.
இதனால் விஜய்க்கு முருகதாஸ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும்,
அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இப்படி கத்தி படத்திற்கு மாற்றி மாற்றி ஏற்பட்ட சிக்கல்தான் முருகதாசுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து முருகதாசின் குடும்ப மருத்துவரிடம் கேட்ட போது, அஜீரணக் கோளாறு காரணமாகவே முருகதாஸ் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார். தற்போது முருகதாஸ் உடல்நலம் தேறி இல்லம் திரும்பி விட்டதாகவும், நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர் என்றும் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எப்படியோ, நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி கத்தி படத்தைப் பற்றி வெளிவந்து கொண்டே இருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும். பரபரப்பும் கூடிக் கொண்டே போகின்றது என்பது மட்டும் உண்மை.