Home நாடு “சைபுல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத – நம்ப முடியாத சாட்சி” – ஸ்ரீராம் இறுதிக் கட்ட...

“சைபுல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத – நம்ப முடியாத சாட்சி” – ஸ்ரீராம் இறுதிக் கட்ட வாதம்!

368
0
SHARE
Ad

DATUK SERI GOPAL SRI RAMபுத்ராஜெயா, நவம்பர் 7 – கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மேல் முறையீட்டு வழக்கின் இறுதி நாளான இன்று, அன்வாரின் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் (படம்) தனது தற்காப்பு வாதத் தொகுப்பை நீதிபதிகள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

“ஒரு சாட்சியத்தை நம்ப வேண்டுமானால் அதற்காக மற்றொரு நம்பிக்கைக்குரிய சாட்சியம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சைபுல் புக்காரி, ஏற்றுக் கொள்ள முடியாத, நம்ப முடியாத ஒரு சாட்சி. அவருடைய சாட்சியத்திற்கு எவ்வித மதிப்பும், நம்பகத் தன்மையும் இல்லை” என கோபால் ஸ்ரீராம் தனது வாதத் தொகுப்பில் கூறினார்.

அதே வேளையில் டாக்டர் ஓஸ்மான் அப்துல் ஹாமிட்டின் சாட்சியம் நம்பகத் தன்மை வாய்ந்தது, நேர்மையானது என்றும் ஸ்ரீராம் சுட்டிக் காட்டினார். அன்வார் மீதான சைபுலின் குற்றச்சாட்டுகளின் மேல் அவநம்பிக்கை ஏற்பட்டுத்தும் வண்ணம் டாக்டர் ஓஸ்மானின் சாட்சியம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

டாக்டர் ஓஸ்மானின் சாட்சியத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) நிராகரித்தது நீதிக்குப் புறம்பானது என்றும் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.

“அன்வார் முதலில் ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கி பின்னர் விடுதலை செய்யப்பட்டு, இப்போது அதே குற்றச்சாட்டுக்காக  மீண்டும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் சாட்டியது சைபுல் என்ற நம்ப முடியாத சாட்சி. எனவே, இந்த வழக்கு ஒரு சதிவலை என குறை கூறுவதற்கு அன்வாருக்கு உரிமையிருக்கின்றது” என்றும் ஸ்ரீராம் வாதிட்டார்.

நீண்ட வாதப் பிரதிவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், அவற்றை ஆராய்ந்து தீர்ப்பை வழங்க தங்களுக்கு அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதனை முன்னிட்டு அன்வாரின் பிணையும் (ஜாமீன்) நீட்டிக்கப்பட்டுள்ளது.