Home நாடு அவசர பொதுக்குழுவை கூட்ட வேண்டும் – வேள்பாரி வலியுறுத்து

அவசர பொதுக்குழுவை கூட்ட வேண்டும் – வேள்பாரி வலியுறுத்து

475
0
SHARE
Ad

Vell Paariகோலாலம்பூர், டிசம்பர் 23 – மஇகா தேர்தல் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண கட்சியின் அவசர பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி வலியுறுத்தி உள்ளார்.

மறுதேர்தல் ஏன் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுக்குழு கூடுவது மிக அவசியம் என்று கூறியுள்ளார்.

“மலாக்காவில் நடைபெற்ற தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுவேன். அதேபோல் தேர்தலில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று நினைத்தால் கட்சித் தலைவரும் தன் பங்கிற்கு அதை நியாயப்படுத்தலாம்.

#TamilSchoolmychoice

“கள்ள வாக்குகள், முறைகேடான கிளைகள், வாக்குப்பதிவு முறைகேடு என பல்வேறு புகார்கள் உள்ளன. 68 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள கட்சியின் நன்மை கருதி, நடந்தவற்றுக்கு கட்சித் தலைவர் பழனிவேல் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்,” என்று வேள்பாரி வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோருபவர்களை பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் என்று பழனிவேல் முத்திரை குத்துவது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைமையகத்தில் கூடியவர்கள், கட்சியை அழிக்க வந்தவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கட்சியின் பதிவு ரத்தாகக் கூடாது, ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், சுதந்திரமாகவும் நியாயமாகவும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வந்தவர்கள் என்றார் அவர்.

“கட்சித் தலைவரைச் சந்திக்க பலமுறை முயன்றேன். அவருடன் இந்த விவகாரம் குறித்து அறிவுறுத்தவும் ஆலோசிக்கவும் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் எதற்கும் கட்சித் தலைமை செவி சாய்க்கவில்லை. தேர்தல் முறைகேடுகள் குறித்து காவல்துறையில் புகார் செய்வேன்,” என்று வேள்பாரி கூறியுள்ளார்.