Home இந்தியா ஜெயலலிதா வழக்கு: ஆதாரங்களை காண்பித்து வாதம் செய்யுங்கள் நீதிபதி குமாரசாமி கண்டிப்பு!

ஜெயலலிதா வழக்கு: ஆதாரங்களை காண்பித்து வாதம் செய்யுங்கள் நீதிபதி குமாரசாமி கண்டிப்பு!

419
0
SHARE
Ad

bhavani_singh_2270992hபெங்களூரு, ஜனவரி 21 – ‘இது வருமானவரி வழக்கல்ல, சொத்து குவிப்பு வழக்கு. எனவே, ரூ.66 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குறித்த ஆதாரங்களை காண்பித்து வாதம் செய்யுங்கள்’ என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் சிறப்பு நீதிபதி குமாரசாமி கண்டிப்புடன் தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அசோகன், பன்னீர்செல்வம், திவாகர், பரணிகுமார், செல்வகுமார், அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ்மரடி, கம்பெனிகள் சார்பில் வழக்கறிஞர் முத்துகுமார், தி.மு.க. சார்பில் இரா.தாமரைசெல்வன், குமரேசன், சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.

#TamilSchoolmychoice

வக்கீல் நாகேஷ்வரராவ் 5-வது நாளாக ஆஜராகி வாதிடும்போது, ‘சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள இரண்டு வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகள் உடனில்லை. இது சட்டப்படி தவறு’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘குற்றவாளி வீடுகளில் சோதனை நடத்த முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? சோதனையின் போது ஏன் குற்றவாளிகளை உடன் வைத்துக் கொள்ளவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், ‘இவ்வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக தொடரப்பட்டது என்பதால், விதிமுறைகள் பின்பற்றவில்லை’ என்றார். இது குறித்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம், நீதிபதி கேட்டபோது, அவர் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.

உடனே குறுக்கிட்ட தி.மு.க வக்கீல் சரவணன், ‘குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்த முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. மேலும் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால், சோதனையின்போது அவர்கள் சார்பில் பாஸ்கரன் என்பவரை பரிந்துரை செய்தனர்.

அவர் முன்னிலையில் தான் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது பறிமுதல் செய்த 28 கிலோ தங்க ஆபரணங்கள் தங்களுக்கு சொந்தமானது என்பதை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஒப்புகொண்டுள்ளனர்’ என்று விளக்கம் அளித்தார்.

அதை தொடர்ந்து நாகேஷ்வரராவ் வாதம் செய்தபோது, ‘எனது கட்சிக்காரர் வழக்கு காலத்திற்கு முன்பு வாங்கிய தங்க ஆபரணங்களையும் வழக்கு காலத்தில் வாங்கியதுபோல் போலீசார் ஜோடித்துள்ளனர்.

தங்க ஆபரணங்கள் தொடர்பாக கடந்த 1992-ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் கணக்கு காட்டியுள்ளபோது, எப்படி வழக்கு காலத்தில் ஆபரணங்கள் வாங்க முடியும். மேலும் போலீசார் செய்துள்ள மதிப்பீட்டிலும் குளறுபடி உள்ளது.

பறிமுதல் செய்த ஒவ்வொரு ஆபரணத்தின் உண்மையான எடை மற்றும் மதிப்பை காட்டாமல், பொதுவாக காட்டியுள்ளனர். இது தொடர்பாக தனி நீதிமன்றத்தில் விளக்கமாக எடுத்து கூறியும் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளனர்’ என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, ‘இது வருமான வரித்துறை வழக்கல்ல. சொத்து குவிப்பு வழக்கு. தனி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குறை என்பதை மட்டும் மையமாக வைத்து வாதம் செய்யுங்கள்.

ரூ.66 கோடிக்கான ஆவணங்களை காண்பித்து பேசுங்கள். மேலும், மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் இல்லாமல் தீர்ப்பு சொல்வது சரியல்ல’ என்று கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.