கோலாலம்பூர், ஜனவரி 29 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மஇகா மத்திய செயலவையைக் கூட்ட வேண்டும் என துணையமைச்சரும் கட்சியின் உதவித் தலைவருமான டத்தோ சரவணன் வலியுறுத்தி உள்ளார்.
அவ்வாறு மத்திய செயலவையை கூட்டத் தவறும் பட்சத்தில், பழனிவேல் வீட்டின் முன் தமது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் கூடப் போவதாக அவர் தெரிவித்தார்.
“24 மணி நேரத்திற்குள் அவர் (பழனிவேல்) கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இல்லையேல் அவரது வீட்டின் முன்பு கூடுவோம். தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருக்கின்றன. மஇகா வரலாற்றில் இப்படியொரு இக்கட்டான, பிரச்சினைக்குரிய சூழல் ஏற்பட்டதில்லை,” என்றார் சரவணன்.
தேசியத் தலைவர் மத்திய செயலவையைக் கூட்டத் தவறும் பட்சத்தில் 15 மத்திய செயலவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தல்கள் செல்லாது என சங்கப் பதிவதிகாரி முடிவு செய்துள்ளதால், 2009ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைதான் இனி அதிகாரபூர்வ மத்திய செயலவையாக கூட முடியும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் பழனிவேல் வீட்டின் முன்பு சுமார் 2 ஆயிரம் பேரை திரட்டவும் தாம் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.