Home நாடு அன்வார் வழக்கு: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது!

அன்வார் வழக்கு: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது!

486
0
SHARE
Ad

Anwar Ibrahimலண்டன், பிப்ரவரி 26 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஓரினப்புணர்ச்சி வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் முற்போக்கு கூட்டணி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்துலக முற்போக்கு கட்சிகளின் கூட்டணி வாயிலாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளது பக்காத்தானைச் சேர்ந்த ஜசெக கட்சி.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் தொழிலாளர்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெரி மெக்கார்த்தி, அன்வாரின் சிறை தண்டனை குறித்து கேள்வி எழுப்பினார் என்றும், அதற்கு ஆசியாவிற்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஹூகோ ஸ்வயர் பதிலளித்தார் என்றும் ஜசெக அனைத்துலக விவகாரங்களின் தலைமைச்செயலாளர் ஹாவர்டு லீ சுவான் ஹவ் நேற்று அறிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான லீ சுவான் கூறுகையில், பிரிட்டிஷ் தொழிலாளர்கள் கட்சி மற்றும் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மற்ற உறுப்பு கட்சிகளின் மூலமாக, அன்வாருக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு நீதி கேட்டு, அனைத்துலக ஆதரவைப் பெற ஜசெக தொடர்ந்து முயற்சி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பிரிட்டிஷ் சார்பில் மலேசிய அரசாங்கத்திடம் எத்தனை முறை பிரதிநிதிக்கப்பட்டது என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கெரி மெக்கார்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஸ்வயர், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அன்வாருக்கு தண்டனை விதித்த கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு குறித்து தங்களது வருத்தத்தை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு முன்பு கடந்த டிசம்பர் 4-ம் தேதி, மலேசிய தூதருடனான சந்திப்பின் போது, இந்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும், கடந்த டிசம்பர் 9-ம் தேதி, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களின் செயலாளர் பிலிப் ஹேமண்டும் தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும் ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.