இந்தப் படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில்;- “ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது, எனவேதான் இயக்குநர் சத்யசிவா இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்துள்ளார்”.
“ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை. சமீபத்தில் வெளியான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்களும்கூட சிங்களச் சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவைதான்”.
“அந்த படங்கள் ஈழத் தமிழர் போராட்டத்தையும், தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தியதே தவிர, ஈழத் தமிழர் பற்றிய உண்மையை கூறவில்லை”.
“இந்தியாவில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகளுக்கெல்லாம் வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது”.
“இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது”.
“மேலும், அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது” என்று தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.