கோலாலம்பூர், மே 9 – பிரதமர் நஜிப் தலைமைத்துவம் மீதான எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்னோ தலைமைத்துவத்தைக் கைப்பற்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் முன்வருவாரா என்ற கேள்விதான் அம்னோவில் இதுநாள்வரை பரவிக் கிடந்தது.
1எம்டிபி நிறுவனத்தை அரசாங்கம் கையாள்வது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், இதனால் நிலவும் அதிருப்தி இது பெரிய விவகாரமாக வெடிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கும் 1எம்டிபி பிரச்சனைதான் மிக முக்கியமானக் காரணம் என்று மொய்தீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
விஷத்தன்மை வாய்ந்த இந்த சர்ச்சை மக்களை மட்டும் பாதிக்காமல் அம்னோவையும் பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பணம் 1எம்டிபியைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படாது என மொய்தீன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்றாலும் இப்போதுதான் முதன்முறையாக எதிர்மறையான கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.
அரசாங்கத் துணை நிறுவனங்களில் ஒன்றான தாபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப்பயணத்திற்கான சேமிப்பு நிதி வாரியம் அண்மையில் 1எம்டிபி மேம்பாட்டுத் திட்ட நிலமொன்றை 188.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளது தொடர்பில் துன் மகாதீர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.