Home இந்தியா பொது வேலைநிறுத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி

பொது வேலைநிறுத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி

651
0
SHARE
Ad

karunanaithiசென்னை, மார்ச்.7- இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக திமுக அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் வெற்றிக்கரமாக்கித் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது, ஈழத் தமிழர் தொடர்பாக திமுக அக்கறை செலுத்தவில்லை என்று சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இலங்கையில் 2 வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முன் வராவிட்டால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று அறிவித்தோம்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து பிரதமர் மன்மோகன் இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படும் என்று அறிவித்தார். இலங்கை அதிபர் ராஜபட்சவிடமும் மன்மோகன் சிங் பேசினார். இலங்கை அரசை வலியுறுத்தி மனிதச் சங்கிலியையும் நடத்தினோம். சென்னையில் நான் (கருணாநிதி) உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொண்டேன்.

அப்போது இலங்கை அரசு போர் நிறுத்தம் என்ற பொய்யான அறிவிப்பினை வெளியிட்டது. இதை நம்பி இந்திய அரசும் எனக்குத் தகவல் தெரிவித்தது. இதன் காரணமாக உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள நேரிட்டது. இதனை யார் நம்புகிறார்களோ இல்லையோ இலங்கைத் தமிழர் பிரச்னையில் என் மனசாட்சிக்கொப்ப நடந்துகொண்டுதான் இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்றால் அதற்காக நான் ஆட்சியை இழக்கவும் தயாராக இருக்கிறேன் என்று சட்டப்பேரவையிலேயே கூறியிருக்கிறேன். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 2 முறை ஆட்சியை இழந்திருக்கிறோம். பேரவை உறுப்பினர் பதவியை க.அன்பழகனோடு சேர்ந்து நானும் ராஜினாமா செய்திருக்கிறேன். இதற்கு மேலும் விஷமத்தனமான பிரசாரங்களுக்கு நான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

எனவே, மார்ச் 12-ம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தை கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், சங்கடங்களைப் பொறுத்துக் கொண்டு வெற்றிகரமாக்கித் தர வேண்டும்.

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன் வரவேண்டும். அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.