Home நாடு சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் – சாகிட் ஹமிடி

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் – சாகிட் ஹமிடி

390
0
SHARE
Ad

zahidhamidicitizen1606தவாவ், ஜூன் 29 – 15 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்கள் வருவதற்கு முன் சட்டவிரோதத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி கூறியுள்ளார்.

தற்போது 2 மில்லியன் சட்டவிரோதத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

“சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்குக் குடிநுழைவுத்துறை, காவல்துறை, ரேலா மற்றும் பிற முகைமையங்கள் தங்களது ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தி உள்ளன. எனவே தீபகற்ப மலேசியாவில் மட்டுமல்லாது, சபா மற்றும் சரவாக்கிலுள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களும் வெளியேற்றப்படுவர்.

#TamilSchoolmychoice

“இதற்கிடையே அத்தொழிலாளர்களை வெளியேற்ற சம்பந்தப்பட்ட நாடுகளுடைய தூரதரகங்களின் ஒத்துழைப்பும் கோரப்படும்,” என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹமிடி தெரிவித்தார்.

தோட்டத்துறை, கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் நிலவும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே 15 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை அழைத்து வரப் பிரதமர் நஜிப் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விசயத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்றார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கட்டுக்கடங்காத வகையில் நம் நாட்டுக்குள் திணிக்கப் போவதில்லை. ஏனெனில் வங்கதேசத் தொழிலாளர்கள் வருவதற்கும் முன்பே இங்குள்ள சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வெளியேற்றிவிடுவோம். அதன் பின்னர் முறையான ஆவணங்களைக் கொண்ட தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவர். தகுந்த ஆவணங்கள் இன்றி அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றவும், விசா காலத்தைக் கடந்து தங்கியிருக்கவும் எந்த நாடும் அனுமதிப்பதில்லை,” என்றார் ஹமிடி.

பல்வேறு துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளில் 15 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்கள் மலேசியாவில் பணியமர்த்தப்படுவர் எனக் கடந்த வாரம் ஹமிடி அறிவித்திருந்தார்.