Home Featured நாடு ‘அல்தான்துயாவைக் கொல்ல ரசாக் பகிண்டாவிற்குக் காரணம் இருந்தது’

‘அல்தான்துயாவைக் கொல்ல ரசாக் பகிண்டாவிற்குக் காரணம் இருந்தது’

637
0
SHARE
Ad

Musa-Hassanகோலாலம்பூர் – மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், அல் ஜசீரா செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம், மலேசியர்கள் மத்தியில் காட்டுத்தீயை விட வேகமாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், நேற்று முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் மூசா ஹசான் கூறியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் நஜிப்பின் உதவியாளர் அப்துல் ரசாக் பகிண்டாவை நீதிமன்றம் விடுவித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“துரதிருஷ்டவசமாக ரசாக் பகிண்டா விடுதலை செய்யப்பட்டார்” என்று மூசா ஹசான் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அல்தான்துயாவை கொலை செய்யும் அளவிற்கு ரசாக் பகிண்டாவிற்கு என்ன காரணம் இருக்கிறது? என்று மக்கள் கேட்டார்கள். காரணம் என்னவென்று நீங்கள் கேட்டால், பகிண்டாவை தான் மிரட்டியதை அல்தான்துயாவே நேரடியாகச் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அது தான் (கொலைக்கான) காரணம்.” என்று மூசா ஹசான் தெரிவித்துள்ளார்.

“அல்தான்துயா காணாமல் போவதற்கு முன்பு, பிரிக்பீல்ட்ஸ் காவல்துறையில் புகார் அளித்திருந்ததை நான் கண்டுபிடித்தேன். அந்த புகாரில் தான் சிலரால் அச்சுறுத்தப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் அல்தான்துயா குறிப்பிட்டிருந்தார்.”

“தனது ஆண் நண்பரிடமிருந்து பணத்தைப் பெற தான் இங்கு வந்ததாகவும், ஆனால் தான் இங்கு மிரட்டப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தனக்கு எதுவும் நேர்ந்தால் அதற்கு அந்த நபர் தான் காரணம் என்றும் அல்தான்துயா புகார் அளித்திருந்தார்” என்று மூசா ஹசான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், “இந்தக் கொலை தொடர்பில் ஏதேனும் புதிய ஆதாரங்கள் இருக்குமானால் காவல்துறையில் புகார் அளியுங்கள். மாறாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் போல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்றும் மூசா கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்தான்துயா மாயமான வழக்கில் ரசாக் பகிண்டாவை தான் கைது செய்ய வேண்டும் என்றும் நஜிப்பிடம் கேட்ட போது, “உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று அவர் கூறியதாகவும் மூசா ஹசான் தெரிவித்துள்ளார்.