இருப்பினும், தனது தலைமையிலான உரிமை கட்சி, கோலகுபு பாரு தேர்தலில் பக்காத்தான் – ஜசெக வேட்பாளரைத் தோற்கடிப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் இராமசாமி தெரிவித்தார்.
“எனினும், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டதால், இறுதி வாக்கெடுப்பு முடிவுகளில் உரிமை கவனம் செலுத்தும். முன்பு கூறியது போலவும், பலமுறை கூறியது போலவும், இந்தியர்களை இந்த நாட்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் தர குடிமக்களாக நடத்தும் பக்காத்தானுக்கும் ஜசெகவுக்கும் வேதனையான மற்றும் மறக்க முடியாத பாடம் கற்பிக்க கோலகுபுபாரு வாக்களிப்புகளை பயன்படுத்துமாறு உரிமை இந்தியர்களையும் மற்றவர்களையும் கேட்டுக்கொள்கிறது” என்றும் இராமசாமி கேட்டுக் கொண்டார்.
“இந்திய சமூகம் பல முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஜசெக தலைவர்களில் ஒருவரான ஙா வின் ஆதரவாளரான ஜசெக வேட்பாளருக்கு வாக்களிக்காமல் பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முகமது அக்மால் கே.கே. மார்ட்டின் வியாபாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி கேள்வி எழுப்ப முடியாதவர் ஙா கோர் மிங் என்பதை மக்கள் அறிவார்கள். உரிமை வேறு எந்த அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளுக்காக பிரச்சாரம் செய்யாது, ஆனால் பாசாங்குத்தனமான “மதானி” அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுடன் சகோதர உறவைப் பேணும்.
“பக்காத்தான்-ஜசெக, வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என உரிமை விரும்புகிறது. அத்தகைய தோல்வி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தற்போதைய பக்காத்தான் தலைமையிலான அரசாங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் தலைமையிலான அரசாங்கத்தின் தோல்விக்கான சக்திவாய்ந்த வியூகத்தை அமைக்கும். உரிமையற்ற இந்தியர்கள் மற்றும் பிறரின் சுதந்திரக் குரலாக உரிமை செயல்படும். உரிமை பெரிக்காத்தானுடன் நட்பாக இருக்கலாம், ஆனால் அது தவறான வழியில் சென்றால் அந்த எதிர்க்கட்சி கூட்டணியை கண்டிப்பாக சுட்டிக்காட்டவோ அல்லது விமர்சிக்கவோ செய்வோம்” என்றும் இராமசாமி தெரிவித்தார்.