Home Featured நாடு சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!

சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!

946
0
SHARE
Ad

ipohகோலாலம்பூர் – ஈப்போவில் இந்து ஆலயம் ஒன்றில் நேற்று மர்ம நபரால் தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஹிண்ட்ராப் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தை ஒரு மனநோயாளியின் செயலாகக் கருதி அதை புறந்தள்ளிவிடவேண்டாம் என்றும், அந்நபர் ஓட்டிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் காரின் பின்புறம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கொடி இருந்ததால் இந்தச் சம்பவம் அபாய எச்சரிக்கையை எழுப்புகின்றது என்றும் தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீகாலிட் அபு பக்கருக்கு, வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மலேசியாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் நுழையும் அபாயம் இருப்பதை எப்போதும் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டி வரும் ஹிண்ட்ராப், அண்மையில் கூட ஜாகிர் நாயக் சொற்பொழிவு விவகாரத்தில் கவலை தெரிவித்தது என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

எனவே, இந்தச் சம்பவத்தை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய அந்நபர் அனைத்துலக அளவிலோ, குழு அல்லது தனிநபர் உதவியுடனோ பெரிய அளவிலான திட்டங்களை வைத்திருக்கலாம் என்பதால் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் காலிட்டுக்கு வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்றும், நாட்டிலுள்ள இந்து சமூக மக்கள் இது ஒரு தனிச்சம்பவமாக நம்பவில்லை என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மலேசியாவிற்கு வருகை புரிந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மற்ற மதங்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் மக்களை தனது பேச்சால் கவரக்கூடியவர் என்பதால், இந்தச் சம்பவத்திற்கும் அதற்கும் தொடர்பிருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.