Home Featured கலையுலகம் அனைத்துலகத் திரைப்பட விழாவிற்கு ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தேர்வு!

அனைத்துலகத் திரைப்பட விழாவிற்கு ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ தேர்வு!

1033
0
SHARE
Ad

EVT6கோலாலம்பூர் – கார்த்திக் ‌‌ஷாமலன் இயக்கத்தில் ஜெயா கணேசன், மோகன ராஜ், கே.எஸ்.மணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திகில் திரைப்படமான, “என் வீட்டுத் தோட்டத்தில்”, அமெரிக்காவைச் சேர்ந்த புவேர்ட்டோ ரிக்கோ தீவில் நடைபெறவிருக்கும் அனைத்துலகத் திகில் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

உலகிலேயே திகில், மர்மங்கள் நிறைந்த குறும்படங்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்களை அங்கீகரிப்பதற்கென நடத்தப்படும் முதல் மற்றும் ஒரே திரைப்பட விழாவாக புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழா (Puerto Rico Horror Film Fest – PRHFF) கருதப்பட்டு வருகின்றது.

200px-logo-solo-prhffஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த விழாவில், உலகளவில் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றது.

#TamilSchoolmychoice

திகில் திரைப்படங்களுக்கான சிறந்த ஒளிப்பதிவை அங்கீகரிப்பதே இவ்விழாவின் நோக்கம் என இத்திரைப்பட விழா நிர்வாகம் தெரிவிக்கின்றது.

அதோடு, இத்திரைப்படவிழா பற்றி பிரபல மூவிமேக்கர் மேகசின் வெளியிட்டுள்ள கருத்தில், உலகிலேயே 13 மிகச் சிறந்த திரைப்பட விழாக்களில் புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழாவும் ஒன்று. அதற்காக உயிரைக் கூட கொடுக்கலாம் என்று வர்ணித்துள்ளது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த அனைத்துலகத் திரைப்பட விழாவில், மலேசியத் திரைப்படமான”என் வீட்டுத் தோட்டத்தில்” இடம்பிடித்திருக்கிறது. அதோடு, சிறந்த அனைத்துலக முழுநீளத் திரைப்படப் பிரிவில் போட்டியிட்டு விருதை வெல்லும் வாய்ப்பும் இருக்கின்றது.

திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே திரைப்பட விழாக்களில் தேர்வு பெற்று விருதுகளையும் வெல்வது அண்மைய காலமாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், “என் வீட்டுத் தோட்டத்தில்” அனைத்துலக திரைப்பட விழாவில் முதன் முதலாக திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ksஇது குறித்து இயக்குநர் கார்த்திக் ஷாமலன் கூறுகையில், “என் வீட்டுத் தோட்டத்தில் வெளியிடத் தயாராக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் திரையிடலாம். ஆனால் எனக்கு நிறைய கனவுகள் உள்ளது. அந்த வகையில், இதோ புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழாவில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாகத் திரையீடு காண்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் ‘மறவன்’, ‘ஜகாட்’ ஆகிய இரண்டும் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் இடம்பெற்று விருதுகளைக் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக அப்படி ஒரு உலக அங்கீகாரத்தை நோக்கிச் செல்கிறது, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’.

வாழ்த்துகள் இயக்குநர் கார்த்திக் ‌‌ஷாமலன்…