Home Featured நாடு சமயப் பள்ளி மாணவர் மரணம்: அதிவிரைவாக விசாரணை நடத்த நஜிப் உத்தரவு!

சமயப் பள்ளி மாணவர் மரணம்: அதிவிரைவாக விசாரணை நடத்த நஜிப் உத்தரவு!

896
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – கோத்தா திங்கியில் உள்ள சமயப் பள்ளியில் படித்து வந்த மொகமட் தாகிவ் அமின் (வயது 11) என்ற மாணவர் அப்பள்ளியின் துணை வார்டனால் சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று புதன்கிழமை அம்மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இறந்த மாணவரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்ன பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்த விவகாரத்தில் அதிவேகமாக விசாரணையை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

“இந்த வழக்கில் மிக விரைவாக விசாரணை நடைபெற வேண்டும். அப்போது தான் இறப்பிற்கான காரணம் தெரியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நஜிப் தனது பேஸ்புக்கிலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், மொகமட் தாகிபின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

மாணவர் தாகிப் ஜோகூர் பாரு கோத்தா திங்கியில் உள்ள சமயப்பள்ளியில் படித்து வந்தார். அங்கு அவரது துணை வார்டன் இரப்பர் குழாயினால் கால்களில் தொடர்ந்து அடித்து வந்ததால் கால்களில் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இரு கால்களையும் துண்டிக்கும் நிலைக்கு ஆளானார் தாகிப். ஆனாலும் அவரது வலது கையிலும் தொற்று ஏற்பட்டது.

எனவே வலது கையையும் துண்டிக்க இருந்த நிலையில், அவரது இதயத் துடிப்பு அசாதாரண நிலையில் இருந்ததால், அந்த அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாணவர் தாகிப் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.