Home One Line P1 காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்

காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்

1048
0
SHARE
Ad

சென்னை – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்துள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மற்றும் அமுலாக்கத் துறை அதிகாரிகள் இன்று புதன்கிழமை காலையிலேயே புதுடில்லியில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.

ப.சிதம்பரம் மீது நிலுவையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல், மேக்சிஸ் வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யும் பொருட்டு இந்திய அமுலாக்க அதிகாரிகளும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் நேற்று அவரது புதுடில்லி வீட்டில் மாலை 6.45 மணியளவில் குவிந்தனர்.

எனினும் அவர் வீட்டில் இல்லை என்பதையும், அவரது கைத்தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்பதையும் கண்டறிந்த அதிகாரிகள், அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிதம்பரம் தங்களின் முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் அறிவிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் அவரது வீட்டின் முகப்பில் ஒட்டினர்.

சிதம்பரம் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவிப்பு
#TamilSchoolmychoice

இதற்கிடையில், டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அவருக்கு முன் பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டும் என தங்களின் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க உள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் கூடும்போது, சிதம்பரத்தின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கும்படி அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சிதம்பரம் சார்பில் பேசிய அவரது வழக்கறிஞர்கள், இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணை முடியும்வரை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், வழக்கிற்கு முன்னதாக சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அவரைக் கைது செய்துவிட்டால் பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்பதால் சிபிஐ அதிகாரிகள் வழக்கிற்கு முன்னதாகக் கைது செய்யும் முனைப்பில் இருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் மீண்டும் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடும். ஆனால் உச்ச நீதிமன்றம் மறுத்தால் சிதம்பரம் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.