உரிய நேரம் வரும்போது மகாதீர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என காவல் துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் தெரிவித்தார்.
“முழுமையான விசாரணை முடிவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். விசாரணையை முறையாக நடத்துவோம்,” என்று புக்கிட் அமானில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
முன்னதாக பெர்சே பேரணி தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் உட்பட அதில் பங்கேற்ற அனைத்து அரசியல் பிரமுகர்களிடமும் விளக்கம் பெறப்படும் என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டவர்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியும் அடங்குவார்.
காவல்துறையின் இந்த அறிவிப்பையடுத்து, தமக்கு அழைப்பு வரும் பட்சத்தில், விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என மகாதீர் கூறியிருந்தார்.