‘மயிலு, மயிலு’ என இரசிகர்களை உருகவிட்ட அந்தக் கதாபாத்திரத்துக்குள் ஸ்ரீதேவியை ‘பதினாறு வயதினிலே’ படத்தின் மூலம் செதுக்கியவர் பாரதிராஜா.
அதுமட்டுமின்றி, பதினாறு வயதினிலே படத்தை இந்தியில் எடுத்து, அதில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்து, ஸ்ரீதேவியின் இந்திப்படவுலகப் பிரவேசத்தையும் தொடக்கி வைத்தவர் பாரதிராஜா.
“முதலில் ஸ்ரீதேவி எனது பதினாறு வயதினிலே இந்திப் பதிப்பில் நடிக்கத் தயங்கினார். வேண்டாம் என்று மறுத்தார். இருந்தாலும், நான் வற்புறுத்தவே, அந்தப் படத்தில் நடித்து, அந்தப் படப் பிரவேசத்தைக் கொண்டு அடுத்து வந்த இந்திப் படவுலக வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திப் படவுலகிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவரை பதினாறு வயதினிலே பட சமயத்தில் இயக்கிய நினைவுகளை நான் மறக்க முடியாது” என பாரதிராஜா கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் இருந்து யார் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வார்கள் என்பது இதுவரையில் உறுதியாகத் தெரியாத நிலையில் தான் உருவாக்கிய கதாநாயகியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முதல் ஆளாக மும்பை பறந்து சென்றுள்ளார் பாரதிராஜா.