தற்போது ஐ.பி.எப். கட்சியின் டத்தோ சம்பந்தன் (படம்) ஒரு பிரிவாகவும், டத்தோ பஞ்சமூர்த்தி ஒரு பிரிவாகவும், மற்றொரு பிரிவு மதியழகன் தலைமையிலும் மூன்று பிரிவுகளாக இருந்து செயல்பட்டு வருகின்றார்கள்.
இருப்பினும் இந்த மூன்று அணியினரும் 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியையே ஆதரித்து வருகின்றனர்.
ஐ.பி.எப்.பாரு என்று தொடங்கப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி குறித்து மூன்று அணி தலைவர்களும் தனிதனியாக அறிக்கை அளித்துள்ளனர். அதில் மூவருமே ஐபிஎப் பாரு என்ற புதிய கட்சியின் உருவாக்கம் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றும் அதற்கு தங்களின் ஆதரவில்லை என்றும் கூறிவருகின்றார்கள்.
மூன்று அணி தலைவர்களுமே தங்களின் ஆதரவு தே.மு.வுக்கு தான் என்று கூறி வரும் வேளையில், ஐ.பி.எப்.பாரு குறித்த மர்மம் – யார் அதனை அமைக்கின்றார்கள் என்ற ஐயம் நீடித்து வருகின்றது.
ஐ.பி.எப். உறுப்பினர்களில் பலர் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கருதுவதாகவும், அதனால் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக ஐ.பி.எப்.பில் மற்றொரு பிரிவு உருவாகலாம் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
அவ்வாறு ஐ.பி.எப்.பாரு தோற்றுவிக்கப்பட்டால் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், தே.மு.வுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் இரண்டு குழுவாக இருந்து செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.