சென்னை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனும் தங்கமணியும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி ஜெயலலிதாவுடனான தனது பழைய புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஜெயலலிதாவுடன் பழகிய தருணங்களை நினைவு கூர்ந்து ஜெயலலிதாவின் பெருமைகளைப் பதிவிட்டார்.
சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஜெயலலிதா குறித்த பேட்டிகளும் பழைய சம்பவங்களும் பலரால் நினைவு கூரப்பட்டன. பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.