சென்னை : அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு நேற்று (திங்கட்கிழமை ஜூன் 2) சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
எனினும் இந்த வழக்கைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் மர்மங்கள், ஐயப்பாடுகள் குறித்து இன்னும் அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
பல வழக்குகளை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் தமிழ் நாடு அரசு இந்த வழக்கை மட்டும் ஐந்தே மாதங்களில் முடித்தது ஏன்? அதிலும் மற்ற யாரும் இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை – ஞானசேகரன் தனியாகவே இந்த வழக்கில் செயல்பட்டார் என்ற அடிப்படையில் அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
“யார் அந்த சார்? எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அந்த சார் யார் என்பதை அடுத்து அமையப் போகும் அதிமுக ஆட்சியில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்” என அறிவித்திருக்கிறார்.