கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது, யூசோப் ராவுத்தர் என்பவர் தொடுத்திருக்கும் பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் பிரதமர் என்ற முறையில் தனக்கு சட்டவிலக்கு அளிக்க வேண்டுமென கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு கேள்விகள் சட்ட வரம்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அதற்கான அனுமதியை வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன், அன்வாரின் பாதுகாப்பு, நிர்வாக செயல்பாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசியலமைப்பு அடிப்படையில்லை என்று தனது தீர்ப்பில் கூறியதோடு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளது, அதே நேரத்தில் அன்வாரின் சட்டக் குழு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை தடையுத்தரவு கோரும்.
இன்று தனது தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன், அன்வார் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு குறிப்பிடக் கோரிய எட்டு அரசியலமைப்பு கேள்விகள் தேவையான வரம்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் தெரவித்தார்.
எனவே, ஜூன் 16-ஆம் தேதியன்று திட்டமிட்டபடி வழக்கு விசாரணையை தொடர அவர் உத்தரவிட்டார்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வாரின் அலுவலகத்தில் அன்வார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி 2021 ஆம் ஆண்டு சட்ட நடவடிக்கையைத் தொடங்கிய யூசோப் ராவுத்தருக்கு RM20,000 செலவுத் தொகையையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
பிரதமராகிய தான் சிவில் வழக்குகளிலிருந்து விலக்கு பெற உரிமையுள்ளவரா என்பது குறித்த எட்டு அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து அதற்கான தீர்ப்பு வரும் வரை நடப்பு பொது (சிவில்) வழக்கின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அன்வார் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை அனுமதிக்கப்படுவது தனது நிர்வாகப் பொறுப்புகளை திறம்படச் செய்ய தனது திறனை சமரசம் செய்யுமா? அதிகாரப் பிரிவின் அரசியலமைப்பு கோட்பாட்டை மீறுமா? என்பதையும் கூட்டரசு நீதிமன்றம் தீர்மானிக்க அவர் கோரியிருந்தார்.
“பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செயல்கள் தொடர்பான சிவில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். குறிப்பாக இத்தகைய வழக்கு தொல்லை தருவதாக அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டப்படும்போது, இந்த வாதம் தாக்குப்பிடிக்க முடியாத ஒன்று” என்றும் நீதிபதி வர்ணித்தார்.
மேல்முறையீடு செய்யலாம், ஆனால் விசாரணையும் தொடரும்
நீதிபதியின் முடிவைத் தொடர்ந்து, அன்வாரின் வழக்கறிஞர் ஆலன் வோங், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்போது தடையுத்தரவை வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று வாய்மொழி விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
பிரதிவாதி மேல்முறையீடு தாக்கல் செய்வதை நீதிமன்றம் தடுக்காது என்று ரோஸ் மாவார் கூறினார், ஆனால் கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என அன்வாரின் சட்டக் குழு தெரிவித்தது. யூசோப் ராவுத்தர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு தடையுத்தரவு கோருவோம் என்றும் அன்வாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.