Home நாடு கண்ணதாசன் விழா: திரளானோர் முன்னிலையில் ஐவருக்கு சிறப்பு விருதளித்து கௌரவம்!

கண்ணதாசன் விழா: திரளானோர் முன்னிலையில் ஐவருக்கு சிறப்பு விருதளித்து கௌரவம்!

70
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) பிற்பல் 1.30 மணி தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெற்ற கண்ணதாசன் விழா இலக்கியச் சுவையும் ரசனையும் கூடிய உரைகளோடும், கண்ணதாசன் புகழ்பாடும் சம்பவங்களின் விவரிப்போடும் சிறப்பாக நடந்தேறியது.

வழக்கமாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கூடுவார்கள் என்ற நிலை மாறி நிகழ்ச்சி நடைபெற்ற செந்துல் செட்டியார்கள் மண்டபத்தில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்குத் திரண்டனர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வாய்ந்தது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவர் சரவணன் அவர்களின் கண்ணதாசன் குறித்த சிறப்பான உரை. கண்ணதாசன் கவிதைகளையும் பாடல்களையும் மேற்கோள் காட்டி உரையாற்றிய சரவணன் கண்ணதாசன்  பாடல்களை விட கவிதைகள் மேலும் ஆழமும் பொருளும் வாய்ந்தவை என்பதால் கண்ணதாசன் பாடல்களை மட்டும் கேட்காமல் அவரின் கவிதைகளையும் படித்து மகிழுமாறு சரவணன் கூட்டத்தினரை கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான சரவணன், தன் வாழ்க்கையில் கண்ணதாசன் விழா எவ்வாறு தொடர்பு கொண்டது என்பதை கடந்தகால சம்பவங்களுடன் விவரித்தார். 1988 ஆம் ஆண்டு ஜாலான் ஈப்போ சாலை வழியே அவர்  வேறு ஒரு காரணத்திற்காக நடந்து சென்ற போது,  இதே செட்டியார்கள் மண்டபத்தில் கூட்டம் திரண்டிருந்ததைக் கண்டதாகவும், என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தபோது அங்கு கண்ணதாசன் விழா நடந்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.

தான் அந்த நிகழ்ச்சியில் நுழைந்த தருணத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் இன்று கண்ணதாசன் விழாவில் நம்மிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் கவிஞர் பெர்னாட்ஷா என்ற சுவாரசியமான தகவலையும் சரவணன் பகிர்ந்து கொண்டார். விதியின் விளையாட்டால் பின்னர் தானே கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவர் ஆகி கடந்த பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தனது சொந்த முயற்சியில் நடத்தி வருவதாக சரவணன் கூறினார்.

இந்த விழாவில்  நிகழ்ச்சிகளுக்குஇடையிடையே கவிதைகளும் வாசிக்கப்பட்டன. சிறுமி அங்கே கன்னி பிரேம் ஆனந்த் வழங்கிய கவிதை அனைவரையும் கவர்ந்தது.  மற்றொரு கவிதையை பாவலர் கோவதன் படைத்தார்.

கண்ணதாசனின் திரைப்பாடல்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார்

முதல் இலக்கிய உரையாக கவிஞர் அ.பெர்னாட்ஷாவின் ‘வள்ளுவன் வழியில் கண்ணதாசன்’ என்ற உரை இடம் பெற்றது.

வள்ளுவரைப் பின்பற்றி கண்ணதாசன் தன் பாடல்களை எவ்வாறு வடிவமைத்தார் என்பது குறித்து பெர்னாட்ஷா உரை நிகழ்த்தினார்.

மற்றொரு இலக்கிய உரையை தமிழகத்தின் திருமதி இந்திரா விஜயலட்சுமி ‘பொழுதுபோக்கு பாடல்களில் சமூகத்தின் பழுது போக்கிய கவியரசர்’ என்ற தலைப்பில் நிகழ்த்தினார். தன் இனிமையான குரலில் கண்ணதாசன் பாடல்களை பாடி அந்தப் பாடல்களின் இலக்கிய நயத்தையும் ஆழ்ந்த பொருளையும் எடுத்துரைத்தார் இந்திரா விஜயலட்சுமி.

மற்றொரு இலக்கிய உரையை தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் வழங்கினார். “காலத்தால் அழியாத காவியம் தந்திட்ட கவியரசு கண்ணதாசன்”  என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக திருமதி தமிழ்வாணி செயல்பட்டார்.

கண்ணதாசன் விழா நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல் இலக்கிய, சமூகப் பணியாற்றிய ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நாட்டின் பிரபல ஓவியர் லேனா சாதனைத் தலைவர் துன் சாமிவேலு விருது பெற்றார்.  பல்லாண்டு காலமாக வானொலியில் பணியாற்றி பல வானொலி நாடகங்களையும் சிறந்த வானொலி நிகழ்ச்சிகளையும் ஒலியேற்றிய திரு எல்.ராமன் அவர்களுக்கு மக்கள் தலைவர் தான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது.

தமிழவேள் கோ.சாரங்கபாணி விருதை திருமதி கமல சரஸ்வதி ராஜேந்திரன் பெற்றார்.

மலேசியக் காவல்துறையில் பல்லாண்டு காலம் சிறந்த பணியாற்றி பல உயர் பதவிகளையும் வகித்த டத்தோஸ்ரீ தெய்வீகன் அவர்களுக்கு தமிழ்க் காவலர் முருகு சுப்பிரமணியன் விருது வழங்கப்பட்டது.  பணி ஓய்வு பெற்ற பின்னரும் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் அவர்களை நன்னெறிக்கு செலுத்தும் உரைகளையும் எழுத்தோவியங்களையும் தெய்வீகன் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் வழங்கப்படும் விருது திருமதி விஜயவாகினி ராஜு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவில் சான்றோர்களுக்கு விருது வழங்குவது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 1987-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டுவரை 11 பேர் இதுவரை கண்ணதாசன் விழாவில் விருதுகளை பெற்றிருக்கின்றனர்.

கண்ணதாசன் விழாவில் திரளான மக்களுடன் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, மாஹ்சா பல்கலைக்கழகத் தலைவரும் வேந்தருமான தான்ஸ்ரீ ஹானிபா, வணிகப் பிரமுகர் தான்ஸ்ரீ ரவி மேனன், மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஆனந்தன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கநாதன்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மாலையில் தேநீர் விருந்து உபசரிப்புடன் கண்ணதாசன் விழா இனிதே நிறைவு பெற்றது.