Home கலை உலகம் மனைவியின் சித்ரவதை தாங்க முடியவில்லை: நடிகர் கிருஷ்ணா கண்ணீர்ப் புகார்!

மனைவியின் சித்ரவதை தாங்க முடியவில்லை: நடிகர் கிருஷ்ணா கண்ணீர்ப் புகார்!

624
0
SHARE
Ad

actor-krishna-wedding-reception-photos-20சென்னை, ஜூலை2- மனதாலும், உடலாலும் இன்னும் பல வழிகளிலும் மனைவி கொடுமைப்படுத்துவதால் அவருடன் நடந்த திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கக்கோரி நடிகர் கிருஷ்ணா, குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிரபல இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பியும், தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனுமான நடிகர் கிருஷ்ணா, ‘அலிபாபா, கழுகு’ உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இவர், கோவை மாவட்டம்  பி.புளியம்பட்டியைச் சேர்ந்த ஹேமலதா என்பவரைக் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு சென்னைக் குடும்பநல நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஹேமலதாவும், நானும் காதலித்துப்  பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின்னர் வடபழனியில் வீடு எடுத்துத் தனிக்குடித்தனம் நடத்தினோம்.

ஹேமலதா மனைவிக்குரிய கடமைகளைச் செய்யாமல், தேவையில்லாமல் என்னுடன் தகராறு செய்து வந்தார். அவரது சந்தேகப் புத்தியினால், நடிப்புத் தொழிலில் என் மனதைச் சரிவரச் செலுத்த முடியவில்லை.

ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பல எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு, என்னிடம் ஓயாமல் சண்டை போட்டார்; என்னை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்தார்.

இதனால், சில நேரங்களில் எனக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. அவருடன் வாழ்ந்த 14 மாதங்களும், எனக்கு மனரீதியான பல கொடுமைகளைச் செய்தார்.

என் மனைவி வேலைக்குச் சென்று சம்பாத்தியம் செய்தாலும், அவருக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் நானே செய்தேன்.

சினிமா படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டுக்கு வரும்போது, கதவைத் திறக்க மாட்டார். இதனால் பல இரவுகள் நண்பர்களது வீட்டில் தங்கியிருக்கிறேன்.

இதற்கிடையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்மீது ஹேமலதா புகார் செய்தார்.
அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஹேமலதா சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.

கடந்த மார்ச் மாதம் முதல் அவரைவிட்டுப் பிரிந்து நான் தனியாக வசித்து வருகிறேன்.

கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டக் காவல்துறையினர்  என்னைத் தொலைபேசியில் அழைத்து, என் மீது ஹேமலதா வரதட்சணைப் புகார் கொடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் கூறினர்.

திருமணத்தின்போது ஹேமலதாவின் பெற்றோரிடம் வரதட்சணை எதுவும் நாங்கள் கேட்கவில்லை. திருமணச் செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர் தான் செய்தனர்.

ஆனால், என்னைத் துன்புறுத்தவேண்டும் என்பதற்காகச் சென்னையில் வசிக்கும் ஹேமலதா கோவை மாவட்டக் காவல்துறையில் என் மீது பொய்ப் புகார் செய்துள்ளார்.

என்னைப் பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் அவருடன் இனிச் சேர்ந்து வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி நடந்த எங்களது திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கவேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

அந்த மனுவை அவர் சென்னைக் குடும்பநல நீதிமன்றத்திற்கு நேரில் வந்து நேற்று தாக்கல் செய்தார்.