Home கலை உலகம் தமிழ்ச் சினிமாவில் முதலில் தமிழை ஒழுங்காய்ப் பேசுங்கள் – பாரதிராஜா!

தமிழ்ச் சினிமாவில் முதலில் தமிழை ஒழுங்காய்ப் பேசுங்கள் – பாரதிராஜா!

567
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????????????????சென்னை, ஜூலை3- “தமிழ்ச் சினிமா வளர்ந்திருக்கிறது; ஆனால் அதில் தமிழ் வளரவில்லை. தமிழ்ச் சினிமாவில் முதலில் தமிழ் மொழியைத் தெளிவாய்ப் பேச முயற்சியுங்கள்” என்று கூறியுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இயக்குநர் பாரதிராஜா பாடல் குறுந்தட்டு (audio cd) மற்றும் முன்னோட்டக் காணொளியை (trailor) வெளியிட்டுப் பேசும் போது குறிப்பிட்டதாவது:

#TamilSchoolmychoice

“நான் மூன்று தலைமுறைக் கலைஞர்களைப் பார்த்து விட்டேன். பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இப்போது வரைக்கும் உள்ள தலைமுறை வரைக்கும் பார்ப்பதென்பது மகிழ்ச்சிதான்.

இன்றைக்குத் தமிழ்ச் சினிமா அசாதாரண வளர்ச்சி கண்டுள்ளது. அந்த நாட்களில் 10 தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். இப்போது 100 தயாரிப்பாளர்கள், 200 இயக்குநர்கள், ஆண்டுக்கு 300 படங்கள் என்று தமிழ்ச் சினிமா வளர்ச்சி புதிய பரிமாணம் தொட்டிருக்கிறது.

ஆனால், சில படங்களைப் பார்க்கும்போது அதிலுள்ள வசன உச்சரிப்பு படத்தைப் பார்க்கும் ஆசையைத் தூண்டுவதில்லை. தமிழ்ப் படம் தனித்துத் தெரிய வேண்டும். இந்த மண்ணின், மொழியின் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும்.

இது தமிழ்க் கலாச்சாரப் படம் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இந்தியச் சினிமாவில் தொழில்நுட்பத்தில் தமிழ்ச் சினிமாதான் உயர்ந்து நிற்கிறது.

அதே நேரம் தமிழ்ப் படத்தில் தமிழ் மொழியைத் தெளிவாக உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்” என்றார்.

தமிழ்ப்பட இயக்குநர்களே! பாரதிராஜா சொல்வது புரிகிறதா? இனிமேலாவது, நடிகர்களைத் தமிழைத் தெளிவாகப் பேசி நடிக்கச் சொல்லுங்கள்! அதுதான் உண்மையில் தமிழ்ப்படம் என்பதற்கான அடையாளம்.