Home இந்தியா ஒரே வாரத்தில் 1.08 கோடி ரூபாய் வசூலித்த மெட்ரோ ரயில்! 

ஒரே வாரத்தில் 1.08 கோடி ரூபாய் வசூலித்த மெட்ரோ ரயில்! 

809
0
SHARE
Ad

chennai-metro-rail-projectசென்னை, ஜூலை 7 – தமிழகத்தின் தலைநகரான சென்னையில், துவங்கப்பட்ட ஒரே வாரத்தில், மெட்ரோ ரயில் 1.08 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார்  3.26 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்.

கடந்த மாதம் 29-ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்த மெட்ரோ ரயில் சேவை, ஆலந்துார் – கோயம்பேடு இடையே தனது போக்குவரத்தை தொடங்கியது.  கடுமையான நெரிசலில் சிக்கித் தவித்த சென்னை வாசிகள், மெட்ரோ ரயில் சேவையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முதல் நாளில் மட்டும், மெட்ரோ ரயிலில் 40 ஆயிரம் பேர் பயணித்தனர்.

மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்கும் ஆசையால் பலர் குடும்பம், குடும்பமாய் ஆர்வத்துடன் காத்திருந்து பயணித்தனர். இதற்கிடையே, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர், நடிகைகள் ஆகியோரும் மெட்ரோ ரயிலில் தங்கள் பயணம் அனுபவத்தை ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். இதனால், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆசை மக்களிடையே மேலும் பரவலானது.

#TamilSchoolmychoice

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெட்ரோ  ரயில் துவக்கப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் 3.26 லட்சம் பயணிகள் பயணித்து உள்ளனர். அந்த வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை தினங்களில் மட்டும், 1.56 லட்சம் பேர் பயணித்தனர். இதன் மூலம் ஒரு வாரத்தின் மொத்த வருவாய், 1.08 கோடி ரூபாயைத் தாண்டியது” என்று கூறியுள்ளார்.