Home இந்தியா தீவிரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஒழிக்க வேண்டும்: மோடி பேச்சு!

தீவிரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஒழிக்க வேண்டும்: மோடி பேச்சு!

495
0
SHARE
Ad

modiஉஃபா,  ஜுலை 10-  ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவில் உள்ள உபா நகரில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 7-வது உச்சி மாநாடு நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமோ ஆகியோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

#TamilSchoolmychoice

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு:

பிரிக்ஸ் நாடுகள், உலகின் 44 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளன. உலகளாவிய மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. உலக வர்த்தகத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 18 சதவீதம் பங்களிப்பு இருக்கிறது.

விவசாயம், உற்பத்தி, தொழில் நுட்பம், சேவைகள், மனித வளங்கள், நிலைத்து நிற்கும் வளர்ச்சி எனப் பல துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒரே மாதிரி இருக்கின்றன.

பிரிக்ஸ் நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, முன்னேற்றத்தின் தூண்டுகோலாக அமையும்.

எனவே பிரிக்ஸ் பொருளாதார நாடுகள், தங்களுக்கு இடையே ஒத்துழைப்பினை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். பிற வளர்ந்த பிராந்தியங்களுடன் பிரிக்ஸ் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகள் இடையே உற்பத்தித் துறை வளர்ச்சி அடைய வேண்டும். இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். உறுப்பு நாடுகள் அனைத்தும் இதன்மூலம் பலன் அடைய முடியும்.

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ் நாடுகள் இடையே எல்லை கடந்த கூட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.

உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதம்:

உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாகத் தீவிரவாதம் அமைந்துள்ளது. அதை எதிர்த்துப் போரிட்டு ஒடுக்குவதில் உலக நாடுகள் பாகுபாடு பார்க்கக்கூடாது.

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை:

ஐ.நா.விலும், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் உடனடியாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றம், வறுமை போன்ற சவால்களை எதிர்த்துப் போரிடுவதற்கு இது மிகவும் கண்டிப்பான தேவை ஆகும்.

70 ஆண்டுகளை நிறைவு செய்கிற நிலையில், ஐ.நா.வில் சீர்திருத்தம் செய்யாமல், 21-ம் நூற்றாண்டின் சவால்களைச் சந்தித்து விட முடியாது.

மேற்கண்டவாறு மோடி பேசினார்.