புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்த மேல் முறையீட்டை பழனிவேல் தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர்.
சங்கப் பதிவகம் அதிகாரத்தை மீறி செயல்படவில்லை
பிப்ரவரி 6ஆம் தேதியிட்ட கடிதத்தை வெளியிட்ட சங்கப் பதிவகம் தனது அதிகாரத்திற்கு மீறிய அளவில் செயல்படவில்லை என நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அசியா அலி தெரிவித்திருக்கின்றார்.
“சங்க சட்டங்களின் பிரிவு 3ஏ-இன்படி சங்கப் பதிவகம் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவு. மற்றொரு பிரிவான 16 (1) – இன்படியும் சங்கப் பதிவகம் புதிய தேர்தல்களுக்கு உத்தரவிட அதிகாரம் கொண்டிருக்கின்றது” என்றும் நீதிபதி அசியா அலி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பழனிவேல் உள்ளிட்ட நான்கு பேரும் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை சங்கப் பதிவகம், மூன்றாம் தரப்பாக வழக்கில் தலையிட்ட டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், 2009 மத்திய செயலவை சார்பில் மூன்றாம் தரப்பாக தலையிட்ட டத்தோ எம்.சரவணன் ஆகியோருக்கு வழங்கவேண்டும் என்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், முன்னாள் உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன், முன்னாள் ஜோகூர் மாநிலத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ், ஆகிய நால்வரின் சார்பாக வழக்காடிய வழக்கறிஞர் ரகுநாத் கேசவன், மறுதேர்தலுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்ததன்வழி சங்கப்பதிவகம் தனது அதிகாரத்துக்கு மீறி நடந்து கொண்டதாக வாதாடினார்.
ஆனாலும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
சங்கப் பதிவகம் சார்பாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் அமர்ஜிட் சிங், பிப்ரவரி 5ஆம் தேதியிட்ட கடிதத்தின்வழி பழனிவேல் சங்கப் பதிவகத்திற்கு சமர்ப்பித்த எல்லாப் பதவிகளுக்குமான மறுதேர்தல் திட்டத்தைத்தான் சங்கப் பதிவகமும் ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 6 தேதியிட்ட ஒப்புதல் கடிதத்தை வழங்கியது என்று வாதாடினார்.
பழனிவேல் முன்மொழிந்த மறுதேர்தல் திட்டத்தைத்தான் சங்கப் பதிவகமும் ஏற்றுக் கொண்டு கடிதம் வழியான உத்தரவினைப் பிறப்பித்தது என்றும் அமர்ஜிட் சிங் சுட்டிக் காட்டினார்.
இன்றைய வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து இனி பழனிவேலுவின் அடுத்த கட்ட அரசியல்-சட்ட நடவடிக்கை என்னவாக இருக்கக்கூடும் என்ற ஆரூடங்கள் மஇகாவில் எழுந்துள்ளன.
-இரா.முத்தரசன்