கோலாலம்பூர், ஜூலை 20 – ரஜினி படங்கள் நன்றாக ஓடினாலும், ஓடாவிட்டாலும், வசூலில் பின்தங்கினாலும், ஒவ்வொரு முறையும் அவரது புதுப் பட அறிவிப்பும், அதைத் தொடர்ந்த செய்திகளும் எப்போதுமே தமிழ் சினிமா இரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.
காரணம், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ரஜினி நடிப்பிலான புதிய படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றாலும், அடுத்த மாதம் தொடங்கி, ரஜினியை மலேசியாவின் சில இடங்களில் மலேசிய இரசிகர்கள் பார்த்து மகிழ முடியும்.
இதற்கு முன்னால், ரஜினியின் ‘பிரியா’ படம்தான் பெருமளவில் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதற்குப் பின்னர் சில படங்களில் ஓரிரு காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், ரஜினியின் புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்ப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘கலைப்புலி’ தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கின்றார்.
அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சித் “நான் இயக்கிய மெட்ராஸ் படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்தது. பல கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருந்ததாக சொன்னார். அதேபோல நாம் இணையும் படத்திலும் இருக்கவேண்டும் என்றார். முள்ளும் மலரும் காளியை திரையில் கொண்டுவர முயற்சி செய்வேன் என்றார்” என்று கூறியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் புதிய படக் கதாபாத்திரம் முள்ளும் மலரும் ‘காளி’ பாணியில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், கலையரசன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்கள். மெட்ராஸ் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து கார்த்தியின் பாத்திரத்துக்கு இணையாக பேசப்பட்ட கலையரசன் ரஜினியுடன் இணைவது அவரது படவுலகப் பயணத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.