Home நாடு லோ யாட் சம்பவம்: பிரதமருக்கு லிம் கிட் சியாங் மின்னஞ்சல்

லோ யாட் சம்பவம்: பிரதமருக்கு லிம் கிட் சியாங் மின்னஞ்சல்

668
0
SHARE
Ad

Lim-Kit-Siangகோலாலம்பூர், ஜூலை 23 – லோ யாட் மோதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியும் அரச விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து விவாதிக்க பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.

சிறு குற்றங்களுக்காக இதுபோன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

ஜசெக நாடாளுமன்றத் தலைவருமான லிம் கிட் சியாங், அரச விசாரணை ஆணையம் தொடர்பில் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட நாடாக வெற்றிகரமாகத் திகழ்வதில் மலேசியா எவ்வாறு மற்ற உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும் என்பது குறித்து விசாரணை ஆணையம் பரிசீலிக்க வேண்டும். சாதாரண செல்பேசித் திருட்டு என்பது பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இனக்கலவரமாக மாறியதை காவல்துறை தடுத்திருக்கலாமோ எனும் கேள்வி எழுந்துள்ளது,” என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

பல்வேறு தரப்பினர் வாழும் மலேசியாவில் சிறு குற்றங்களால் இன மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதை உறுதி செய்ய தகுந்த வரைவுத் திட்டம் தேவை என வலியுறுத்தியுள்ள அவர், உண்மைகளை மறைக்கும் போக்கு கைவிடப்பட வேண்டும் என்றார்.

“பிரச்சினைகளுக்குரிய அடிப்படை காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வுகள் காணப்பட வேண்டும். மாறாக உண்மைகளை மறைக்கக்கூடாது. தற்போதைய அரசாங்கம் பல்லாண்டு காலமாக இத்தகைய போக்கையே கொண்டிருக்கிறது.

“கடந்த 1969, மே 13 இனக்கலவரத்திற்கு பின்பும், கடந்த 2001இல் சிலாங்கூரின் கம்போங் மேடான் கலவரத்திற்கு பின்பும், ஏன் விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை? இவை இரண்டும் உண்மைகளை ஜமுக்காளத்தின் கீழே மறைப்பதற்கான இரு உதாரணங்கள்,” என்று லிம் கிட் சியாங் மேலும் தெரிவித்துள்ளார்.