Home இந்தியா இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை- கருணாநிதி கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை- கருணாநிதி கண்டனம்

447
0
SHARE
Ad

karunanaithiசென்னை, மார்ச் 9 -இலங்கையில், தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை பின்வருமாறு : கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போரில், இலங்கை ராணுவத்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயினர். அவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென்றும், போர்க் கைதிகளாக இன்னமும் அடைபட்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கோரி, கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து, அதில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் தமிழ் மக்கள் அணி அணியாகப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொள்ள முடியாதபடி, சாலைகளில் இலங்கை காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

கொழும்பு நகரத்திற்கு அவர்கள் செல்ல முடியாதபடி காவல்துறையினர் துவக்கத்திலேயே தடுத்து விட்டனர். இலங்கை காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைளின் காரணமாக, கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த தமிழ் மக்கள் வவுனியாவிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்து அங்கேயிருந்த ஒரு அதிகாரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இலங்கை அரசின் இந்த அட்டூழிய நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. அமெரிக்க தூதகரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை அறிய காத்திருக்கிற மக்கள், சுதந்திரமாகச் சென்று வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். சுதந்திரமாகச் சென்று தங்களது கோரிக்கையை தெரிவிக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் பொதுவானது. இதற்கு இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன” என இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து, முழு சர்வாதிகார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.