Home Featured நாடு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது

464
0
SHARE
Ad

handcuffகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கருதப்படும் 10 பேரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் மற்றும் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது 10 பேரும் கைதாகினர். மலேசியாவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கைதானவர்களில் 8 ஆடவர்கள், 2 பெண்கள் அடங்குவர். இவர்களில் இருவர் அரசு ஊழியர்கள், ஒருவர் உள் அலங்கார நிபுணர் மற்றும் ஒருவர் பாலர் பள்ளி ஆசிரியர் எனத் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

“கைதான 10 பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டியுள்ளனர். மலேசியாவில் உள்ள அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சிரியா செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் அந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளையும் இங்கு பரப்பியுள்ளனர் என சந்தேகிக்கிறோம்.”

“ஆயுதங்களை வாங்கி மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் தெரிகிறது. தவிர ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் நாடு திரும்பவும் அவர்கள் உதவி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்று இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் காவல்துறை ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், பெர்லிஸ், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 100 மலேசியர்கள் இந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.