முன்பு தேர்தல் சமயத்தின் போது அதிமுக-வினர் பொதுமக்களுக்குக் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி வாக்குச் சேகரித்தனர்.
தேர்தல் பிரசாரத்தை விட இது எளிதாகவும் அதிகப் பலன் தரக் கூடியதாகவும் இருப்பதை உணர்ந்து கொண்டு, தற்போது கைபேசியில் தங்களின் கட்சி, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளைப் பரப்பி வருகின்றனர்.
அதற்கு ஏதுவாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான ‘கைபேசிச் செயலியை’ அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘CAPTAIN’ என்ற செயலியைத் தொடங்கி, அதன் மூலம் தேமுதிகவின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
அவரை அடுத்துத் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கென்று ‘M.K.Stalin’ என்ற செல்போன் செயலியைச் சமீபத்தில் தொடங்கினார்.
இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் செயல்படும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள், அவர்களது தொகுதியிலும், மாநில அளவிலும் உள்ள பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாசும் ‘Anbumani for Change’ என்ற செயலியைத் தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி “என்று சுவரொட்டியில் பிரசாரம் செய்த பாமக, அதே பாணியில் கைபேசிச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் செயலி திமுக, தேமுதி செயலிகளை விட வித்தியாசமானது என்றும் ,பாமக-வின் இணையதள தொண்டர்கள் இதை நிர்வகிப்பார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.