Home Featured தமிழ் நாடு நீதிமன்றம் குறித்து ரஜினியின் கருத்து – சர்ச்சைக்குள்ளாக்கும் கருணாநிதி!

நீதிமன்றம் குறித்து ரஜினியின் கருத்து – சர்ச்சைக்குள்ளாக்கும் கருணாநிதி!

519
0
SHARE
Ad

karunanidhiசென்னை – “ஒரு நாட்டின் அரசியல் கெட்டுப் போனால், சரி செய்துவிடலாம். ஆனால், நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது” என நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சை, திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு எதிராக திசை திருப்பப் பார்க்கிறாரோ? என்ற ஐயம் ஏற்படும் வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை இருக்கிறது.

திமுக தலைவரே கேள்வியும் கேட்டு பதிலும் தெரிவித்துள்ள அந்த அறிக்கை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

கேள்வி:– ‘‘நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’’ என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே?.

பதில்:– “அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சும் ஆகும்.”

“அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறை கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது. இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.”

“உச்சநீதிமன்றம் பல்வேறு பிரச்சைனைகளில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை, காலத்திற்கேற்பவும் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்பவும் மாற்றியமைத்து கொள்ளலாம் என்பன போன்ற கருத்து சிதைவுகள் வேகமாகப் பரவி வரும் இந்நாளில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் இந்தக் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

rajinikanthஇங்கு, அவர் செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் என்று பூடகமாக குறிப்பிடுவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை தான் என்பது அனைவருக்கும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை அனைவருக்கும் ஏற்புடையதா? என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், 2ஜி அலைக்கற்றை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் மகள் கனிமொழி, கடந்த 2011-ம் ஆண்டு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

எனினும், உயர் நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்தார். அப்படியானால், கருணாநிதியின் அறிக்கை, கனிமொழிக்கும் பொருந்துமோ? என்று அவர் குறிப்பிடுவதுபோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களால் கேட்கத் தோன்றுகிறது.

– சுரேஷ்